Thirukural

தணந்தமை சால அறிவிப்ப போலும்மணந்தநாள் வீங்கிய தோள்.

கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) மணந்த நாள் வீங்கிய தோள் - காதலர் மணந்த ஞான்று, இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும் - இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்துவது போல் மெலியா நின்றன, இது தகாது. ('அன்றும் அவ்வாறு பூரித்து இன்றும் இவ்வாறு மெலிந்தால், இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து அவரைத் தகவின்மை கூறுவர்' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
காதலர் கூடின நாள்களிற் பூரித்ததோள்கள். அவர் நீங்கினமையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பன போலாகாநின்றன. கருவியைக் கருத்தாவாகக் கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனதுதோள் வாட்ட முற்றதுகண்ட தோழிக்குச் சொல்லியது.
தேவநேயப் பாவாணர் உரை:
மணந்தநாள் வீங்கிய தோள்- காதலர் மணந்த நாளில் மகிழ்ச்சி மிகுதியாற் பூரித்த உன் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும்- இன்று அவர் பிரிந்தமையை விளக்கமாகப் பிறர்க்கு உணர்த்துவன போல் மெலிவடைகின்றன. இது கூடாது. அன்று பூரித்ததும் இன்று மெலிந்ததும் ஆகிய இரண்டையும் கண்டவர், உண்மையுணர்ந்து தலைமகனைக் குறை கூறுவர் என்பதாம்.
கலைஞர் உரை:
தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(கண்கள் அப்படி. என் உடம்போ) நானும் என் காதலரும் மணம் செய்துகொண்ட காலத்தில் பூரிப்பினால் பருத்த என் தேகம் இப்போது என் காதலர் பிரிந்திருப்பதால் உண்டான நிலைமையை முற்றிலும் விவரமாக எல்லாருக்கும் விளக்கிச் சொல்வதுபோல மிகவும் மெலிந்துவிட்டது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
காதலர் மணந்தபோது இன்ப மிகுதியால் பூரித்த தோள்கள் இன்று அவர் பிரிந்தமையினை விளங்க உணர்த்துவது போன்று மெலிந்துவிட்டன.
தமிழ்க்குழவி உரை:
காதலரோடு கலந்து மகிழ்ந்திருந்த நாட்களில் பருத்து திரண்டிருந்த எம் தோள்கள் இன்று மெலிந்து நலிந்து அவரின் பிரிவை மற்றவர்க்கும் அறிவிக்கின்றனவோ?
Translation
These withered arms, desertion's pangs abundantly display, That swelled with joy on that glad nuptial day.
Explanation
The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).
Transliteration
Thanandhamai Saala Arivippa Polum Manandhanaal Veengiya Thol

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1233