|
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
('நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) வாராக்கால் துஞ்சா - காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வரின் துஞ்சா - வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆயிடைக்கண் ஆரஞர் உற்றன- ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய ('ஆயிடை' எனச் சுட்டு நீண்டது. 'இனி அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்றும் இல்லை' என்பதாம்)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அவர் வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா: அவ்விரண்டிடத்தினும் மிக்க துன்பமுற்றன கண்கள். இது நீ உறங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் இன்றேயல்ல எஞ்ஞான்றும் உறக்கமில்லை யென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(நீயும் ஆற்றி நின் கண்களுந் தூங்குதல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) வாராக்கால் துஞ்சா-காதலர் வராதிருக்கும்போது அவர் வரவுநோக்கி வழிமேல் விழிவைத்துத் தூங்கா ; வரின் துஞ்சா-அவர் வந்த பின்போ மீண்டும் பிரிதலஞ்சித் தூங்கா; ஆயிடைக் கண் ஆரஞர் உற்றன-இங்ஙனம் அவ்விருநிலைமையிலும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தை யடைகின்றன. என் கண்கள் ஒருபோதும் தூங்கும் நிலைமையில்லை யென்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அவரைக் காணாமல் இப்படித் தவிக்கின்ற கண்கள்) அவர் இல்லாத காலங்களில் அவர் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கத்தால் தூங்குவதில்லை. அவர் வந்துவிட்டாலோ (அவரோடு இடைவிடாது இன்பமனுபவிக்க விரும்பி) தூங்குவதில்லை, அதனால் இந்தக் கண்களால் எனக்கு எப்போதும் துன்பந்தான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
காதலர் வராதபோது அவர் வரவு பார்த்துக் கண்கள் துயிலவில்லை; வந்தபோது பிரிவாரோ என்று அஞ்சித் துயிலவில்லை. ஆதலால் இரு நேரங்களிலும் கண்கள் தூங்கமுடியாமல் துன்பத்தினை அடைந்தன.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
காதலர் வராதபோது கண்கள் துயிலாமல் இருக்கின்றன. வந்த பின்பும் முற்றிலும் தூக்கம் ஒழித்தன; ஆக, என் கண்களுக்குத் தூக்கம் என்பதே இல்லை
|
|
Translation
|
|
When he comes not, all slumber flies; no sleep when he is there;
Thus every way my eyes have troubles hard to bear.
|
|
Explanation
|
|
When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.
|
|
Transliteration
|
|
Vaaraakkaal Thunjaa Varindhunjaa Aayitai
Aaragnar Utrana Kan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|