|
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
('காதலர் பிரிந்து போயினாரல்லர், அவர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் பெற வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.)பேணாது பெட்டார் உளர்-நெஞ்சால் விழையாதுவைத்துச் சொல்மாத்திரத்தால விழைந்தவர் இவ்விடத்தே உளர்; மற்று அவர்க்கண் காணாது அமைவில - அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்?(செயலாற் பிரிந்துநின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமும் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது, 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை. யான் ஆற்றவும் கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாநின்றன என்பதாம். இனிக் 'கொண்கனை'என்று பாடமாயின் 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ'? என்று உரைக்க. இதற்கு 'மன்' அசைநிலை)
|
|
மணக்குடவர் உரை:
|
|
விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ? நம்மைக் கண்டால் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவு முளவோ?
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(காதலர் பிரிந்து போனாரல்லர், அவர் உடலால் ஆங்கிருப்பினும் உள்ளத்தால் ஈங்குளர். அவரைக் காணுமளவும் ஆற்றியிரு என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணாது பெட்டார் உளர்-(ஆம். நீ சொல்வது உண்மைதான்.) நெஞ்சத்தில் நேயங்கொள்ளாது வாய்ச்சொல்லால் மட்டும் நம்மை விரும்பியவர் இங்கே யுள்ளார் ; மற்று அவர்க்காணாது கண் அமைவு இல-ஆயின் அவ்வுண்மைக்கு மாறாக, என் கண்கள் அவரைக் காணாமையால் அமைதியில்லா திருக்கின்றன. பிரிவாற்றாமை யறிந்தும் பிரிந்துபோனமையாற் 'பேணாது' என்றும், முன்னர் நலம் பாராட்டிப் "பிரியேன், அஞ்சேல்" என்று வன்புறையுங் கூறினாராகலின் 'பெட்டார்' என்றும் கூறினாள். யான்ஆற்றியிருக்கவும் என் கண்கள் அவரைக் காணும் வேட்கை மிகுதியால் ஆற்றாதிருக்கின்றன என்பதாம். 'மன்' ஓழியிசைக் கண்வந்தது என்றும் 'ஒகாரம்' அசைநிலை யென்றுங் கூறுவர். அவர் உண்மையில் இங்கிருந்தால் என் கண்கள் அவரைக் கண்டு அமைதியுற்றிருக்கும் என்பதை ஒழியிசையாகக் கொள்க. 'மற்று' மாற்றுப் பொருளில் வந்தது. 'கொண்கனை' என்பது காலிங்கர் கொண்ட பாடம்.. "இனிக் கொண்கனை யென்று பாடமாயின், என் கண்கள் தம்மைக் காணா தமைகின்ற கொண்கனைத் தாங்காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாமவரை விழைந்தார் உலகத்துளரோ வென் றுரைக்க,' என்னும் பரிமேலழகருரை கொள்ளத்தக்கதே. இதற்கு 'மன்'அசைநிலை யென்பர் அவர்.
|
|
கலைஞர் உரை:
|
|
என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
என்மீது உண்மையான காதல் இல்லாமல் என்னுடன் பொய்யுறவு காட்டினவர் (என்னைப் பிரிந்து) எங்கோ ா இருக்கிறாராம். அவரைக் காணாமல் (உறக்கமின்றி அழுது) தவிக்கின்றன என்னுடைய கண்கள், என்ன வஞ்சனை!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உள்ளத்தால் விரும்பாமல் வார்த்தைகளினால் மட்டும் விரும்பிய தலைவர் இவ்விடத்திலேயே இருக்கின்றார். அந்த உண்மையால் பயன் யாது?. அவரைக் காணாமல் கண்களால் இருக்க முடியவில்லையே!
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உண்மையில் விரும்பாமல் விரும்பியவர் போல் இருந்தாரோ? இருந்துமேன் என் கண்கள் அவரைக் காணாது தவிக்கின்றன.
|
|
Translation
|
|
Who loved me once, onloving now doth here remain;
Not seeing him, my eye no rest can gain.
|
|
Explanation
|
|
He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.
|
|
Transliteration
|
|
Penaadhu Pettaar Ularmanno Matravark
Kaanaadhu Amaivila Kan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|