|
எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) எமக்கு இந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது- எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; ஓஒ இனிதே - மிகவும் இனிதாயிற்று. ('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச்சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் இந்நோயகத்துப்பட்டது மிகவும் இனிது. இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
எமக்கு இந்நோய் செய்தகண் தாம் இதற்பட்டது-எமக்கு இக்காமநோயை வருவித்த கண்கள் தாமும் இத்துன்பத்துள் அகப்பட்டுக் கொண்டது; ஒ ஒ இனிதே-மிகவும் இனிதாவதே. துன்பமென்றது தூங்கா தழுதலை.எம்மைத் துன்புறுத்தினார் துன்புறுவது. எம் துன்பந் தீர்ந்தாற் போல்வதென்பதாம். 'ஓ' மிகுதிப்பொருட் குறிப்புச்சொல். 'ஓ ஒ' 'தா அம்' இசைநிறையளபெடைகள். ஏகாரம்தேற்றம்
|
|
கலைஞர் உரை:
|
|
ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
எனக்கு இவ்வளவு காம வேதனையை உண்டாக்கி வைத்த இந்தக் கண்கள் இப்படித் துன்பத்திற் சிக்கிக்கொண்டு (தூக்கமின்றி, அழுதழுது, நீர் வறண்டு) தவிப்பது நான் மகிழத்தக்கதுதான்; படட்டும், நிரம்பப் படட்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
எமக்கு இந்தக் காம நோயினை உண்டாக்கிய கண்கள் தாமும் துயில் கொள்ளாமல் அழுது கொண்டிருக்கின்றன. இது மிகவும் இனிமையாக இருப்பதாயிற்று!
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அன்று எனக்கு இக்காதல் நோயைத் தந்த கண்கள் இன்று தாம் தூங்கமுடியாமல் துன்பப்படுவது இனிதானதே.
|
|
Translation
|
|
Oho! how sweet a thing to see! the eye
That wrought this pain, in the same gulf doth lie.
|
|
Explanation
|
|
The eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh! I am much delighted.
|
|
Transliteration
|
|
Oo Inidhe Emakkinnoi Seydhakan
Thaaam Itharpat Tadhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|