|
என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது). உண்கண் -உண்கண்கள்; உயலாற்றா உய்வு இல் நோய் செய்வன. என் கண் நிறுத்து-அன்று யான் உய்ய மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்லாத நோயை என் கண்ணே நிறுத்தி; பெயலாற்றா நீர் உலந்த - தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன. (நிறுத்தல்: பிரிதலும் பின் கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை உண்கண்கள் நிறுத்தித் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன. கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியவாறு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உண்கண்-என் மையுண்ட கண்கள்; உயல் ஆற்றா உய்வு இல்நோய் என்கண் நிறுத்து-நான் தப்பமுடியாமைக் கேதுவான ஒழியாத காமநோயை என்னிடம் நிறுத்திவிட்டு; பெயல் ஆற்றாநீர் உலந்த-தாமும் தொடாந்து அழமுடியாவண்ணம் நீர் வற்றிவிட்டன. உய்வில் நோய் நிறுத்தலாவது, பிரிதலும் பின் விரைந்து கூடாமையு முடையாரைக் காட்டி, அதனானுண்டாகும் ஆற்றாமை நோயை நீடுநிற்கச்செய்தல். என்னை நெடிது வருந்தச்செய்த தீவினையால் தாமும் வற்றி வறண்டுபோயின என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
சகிக்க முடியாத ஓயாத காமவேதனையை எனக்கு உண்டாக்கி வைத்துவிட்டு அழுது அழுது கண்ணீரற்று வறண்டு போய்விட்டனவே இந்தக் கண்கள்!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மையுண்ட கண்கள் நீக்க முடியாத காமநோயினை என்னிடம் நிறுத்தித் தாமும் அழமுடியாதபடி நீர்வற்றி இருக்கின்றன.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
காதலரைக் காட்டித் தீர்க்க வியலாத காதல் நோயை எமக்குத் தந்த கண்கள் இன்று அழுவதற்குக் கூட முடியாமல் நீர் வற்றிப் போய் விட்டன.
|
|
Translation
|
|
Those eyes have wept till all the fount of tears is dry,
That brought upon me pain that knows no remedy.
|
|
Explanation
|
|
These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up.
|
|
Transliteration
|
|
Peyalaatraa Neerulandha Unkan Uyalaatraa
Uyvilnoi Enkan Niruththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|