Thirukural

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்நீராக நீளும்இந் நோய்.

இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும் எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது.) இந்நோய் - இக்காம நோயாகிய பயிர்; ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் - இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளராநின்றது. ('ஊரவர்' என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது. ஏக தேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம். வரைவானாதல் பயன்.)
மணக்குடவர் உரை:
ஊரார் எடுத்த அலர் எருவாக அன்னை சொல்லும் சொற்கள் நீராக இந்நோய் வளராநின்றது. இஃது அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவையிரண்டிற்கும் வரைவானாதல் பயன்.
தேவநேயப் பாவாணர் உரை:
தலைமகன் சிறைப்புறத்தா னாதலறிந்த தோழி, வரைவு காலந் தாழ்த்தலை ஆற்றாளான தலைமகளிடம் ஊரார் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டுமென்று சொன்ன விடத்து, அவள் சொல்லியது] இந் நோய்-இக்காம நோயாகிய பயிர் ; ஊரவர். கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும்...இவ்வூர் மகளிர் எடுக்கின்ற அலரை எருவாகவும், அது கேட்டு அன்னை கடிந்து கூறும் வெஞ் சொல்லை நீராகவும் கொண்டு, வளர்கின்றது. நோயைக் தணிக்க வேண்டிய ஏதுக்கள் அதை வளர்த்தே வருகின்றன என்பதாம். தலைமகன் விரைந்து வரைவானாதல் கருதிய பயன். 'ஊரவர்' இங்கு ஆணொழி பொதுச் சொல். நோயைப் பயிரென்று உருவகியாமையால் இது ஒரு மருங்குருவகம்.
கலைஞர் உரை:
ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.
சாலமன் பாப்பையா உரை:
இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
ஊரார் பேசுகிற ஏளனப் பேச்சு எருவாகவும், என் தாய் அதற்காக என்னை இடித்துக் கூறும் சொற்கள் நீராகவும் (என் மனத்தில் முளைத்துவிட்ட) காமப் பயிர் வளர்ச்சி அடைகிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இந்தக் காமநோயாகிய பயிரானது இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாகவும் அதுகேட்ட அன்னை சொல்லும் கடுஞ்சொல் நீராகவும் கொண்டு வளர்கின்றது.
தமிழ்க்குழவி உரை:
ஊரார் தூற்றும் பேச்சுகள் எருவாகவும் அன்னையின் கடும் சொற்கள் நீராகவும் எம் காதலை வளர்த்து வருகின்றன.
Translation
My anguish grows apace: the town's report Manures it; my mother's word doth water it.
Explanation
This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.
Transliteration
Ooravar Kelavai Eruvaaka Annaisol Neeraaka Neelumin Noi

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1147