|
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நன்றே தரினும் - தீங்கு அன்றி நன்மையே பயந்ததாயினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல் -நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக. (நன்மை பயவாமையின் நன்றே தரினும் என்றார். இகத்தலான் என்பது இகந்து எனத் திரிந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் முறையே நடுவு நிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச்செல்வம் தீமை பயத்தலும் கூறப்பட்டன.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பெருமையே தரினும் நடுவுநிலைமையை நீங்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நன்றே தரினும்-அறவழியில் வந்த செல்வம் போல் நன்மையே விளைப்பினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்-நடுவுநிலை திறம்புவதால் வரும் செல்வத்தை அப்பொழுதே விட்டு விடுக.
நன்மை தராமையின் 'நன்றே தரினும்' என்பது எதிர்மறை யும்மை தன்னை மட்டுமன்றித் தன் எச்சத்தையுந் தாக்குமாதலின், 'அன்றேயொழிய விடல்' என்றார். விடல் என்பது அல்லீற்று வியங்கோள்.
|
|
கலைஞர் உரை:
|
|
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக்
கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான்
கடைப்பிடிக்க வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஓரவஞ்சகத் தீர்ப்பு செய்வதால் பெருத்த செல்வம் வருவதாக இருந்தாலும்) எவ்வளவு நல்லதானாலும் நடுவு நிலைமையான நேர்மையை விட்டுவிட்டு அடையக்கூடிய செல்வத்தை அப்போதே விலக்கிவிட வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தீமையின்று நன்மையினையே தருவதாக இருந்தாலும் நடுவு நிலைமை நீக்கப்பட்டு வருகின்ற செல்வத்தினை அப்போதே ஒழித்துவிடுதல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நடுவுநிலைமை பிறழ்வதால் வருகின்ற செல்வம் நன்மை தருவதாக இருந்தாலும் அதனைப் பெற்றுக் கொள்ளாமல் அந்தபொழுதே தவிர்த்திடல் வேண்டும்.
|
|
Translation
|
|
Though only good it seem to give, yet gain
By wrong acquired, not e'en one day retain! .
|
|
Explanation
|
|
Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.
|
|
Transliteration
|
|
Nandre Tharinum Natuvikandhaam Aakkaththai
Andre Yozhiya Vital
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|