Thirukural

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவராநுண்ணியர்எம் காத லவர்.

எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(ஒருவழித்தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.) (தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார் கருதுக,) எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய காதலர் எம் கண்ணகத்து நின்றும் போகார்; இமைப்பின் பருவரார் - யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால் வருந்துவதும் செய்யார்; நுண்ணியர் - ஆகலான் காணப்படா நுண்ணியர். (இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின் 'கண்ணுள்ளின் போகார்' என்றும், இமைத்துழியும் அது நிற்றலான் 'இமைப்பின் பருவரார்' என்றும் கூறினாள்.)
மணக்குடவர் உரை:
என் கண்ணுள் நின்று நீங்கார்; இமைப்பேனாயின், இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார்: ஆதலான் எம்மாற் காதலிக்கப்பட்டார் நுண்ணியவறிவை யுடையார்.
தேவநேயப் பாவாணர் உரை:
(ஒருவழித் தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிப் பாளென்றஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது . ) எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய காதலர் ஒருபோதும் கண்ணகத்து நின்றும் நீங்கார் ; இமைப்பின் பருவரார் - யாம் அதை மறந்து ஒருகால் இமைத்தோமாயினும் அதனால் வருத்தமுறார் , நுண்ணியர் - அத்துணைக் கட்புலனாகாத நுண்மை யுடையவர் அவர் . தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் சென்றாரெனக் கருதுவார் கருதுக ; ஆயின் , யான் இடைவிடாது காணுதலின் அங்ஙனங் கருதேன் என்றவாறு . இடையறாத நினைவு முதிர்ச்சியால் என்றுங் கண்முன் நிற்றல்போல் தோன்றலாற் ' கண்ணுள்ளிற் போகார் ' என்றும் , இமைத்த போதும் அது நீங்காமையால் ' இமைப்பிற் பருவரார் ' என்றும் , கூறினாள் .
கலைஞர் உரை:
காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்.
சாலமன் பாப்பையா உரை:
என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(இனி, காதலியானவள் காதலனை நினைத்துச் சொல்லுவது;) என் காதலர் எந்த நேரமும் என் கண்ணிலேயே இருந்து கொண்டிருக்கிறார். அவர் என் கண்ணுக்கு உள்ளேயும் போகாமல் விழிகளுக்கும் இமைகளுக்கும் இடையிலேயே இருந்து கொண்டு, இமைகளை மூடும்போது அதனால் அடிபட்டுத் துன்பமடையாமலும் இருக்கிறாரே! எவ்வளவு சாமர்த்தியம்!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
எமது காதலர் எமது கண்ணுள்ளிருந்து போகமாட்டார். அறியாமல் இமைத்தேனானாலும் அதனால் வருத்தப்படமாட்டார். ஆகையால் நுட்பமான தன்மையுடையவராவார்.
தமிழ்க்குழவி உரை:
என் காதலர் கண்களுக்குள்ளே போகார். மேலேயே இருக்குமவர் இமைக்கின்ற போதும் துன்புறுவதில்லை; மிகவும் நுண்ணியராக உள்ளார்.
Translation
My loved one's subtle form departs not from my eyes; I wink them not, lest I should pain him where he lies.
Explanation
My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal.
Transliteration
Kannullin Pokaar Imaippin Parukuvaraa Nunniyarem Kaadha Lavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1126