|
திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) மதி - மதியே; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் -இம்மலர் போலும் கண்ணையுடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்; பலர் காணத்தோன்றல் - இதுபோல யான் காணத் தோன்று; பலர் காணத் தோன்றாதொழி. (தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மதியே! நீ மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒப்பையாயின், பலர் காணுமாறு தோன்றாதொழிக. இது மதி ஒளியும் வடிவும் ஒத்ததாயினும் குணத்தினாலே ஒவ்வாதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(இதுவுமது) மதி - திங்களே ! ; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் - இத்தாமரை மலர் போலுங் கண்ணையுடையாளின் முகத்தை யொக்க நீவிரும்பு வாயானால் ; பலர் காணத்தோன்றல் - இனியாகிலும் எல்லாருங் காணத்தோன்றாதே , நான் மட்டுங் காணத்தோன்று . ஏற்கெனவேயுள்ள வடிவு நிலையின்மையுங் களங்கமுமாகிய குற்றங்களுடன் , பொதுமகள் முகம்போலப் பலருங்கண் டின்புறுதற் கேதுவான பரத்தைமையுங் கூறியவாறு . பலர் காணத்தோன்றாமை கூடாமையின் முகமொத்த லில்லையென்பதாம் .
|
|
கலைஞர் உரை:
|
|
நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(சந்திரனே!) மலர் போன்ற கண்ணுள்ள என் காதலியின் முகம்போல் பிரகாசமுள்ள பெண்ணாக நீ மாறிவிட்டால், அதன் பிறகு இப்படிப் பலபேர் உன்னைப் பார்க்கும்படி வெளியே திரியக்கூடாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மதியே! மலர்போன்ற கண்ணினையுடைய இப்பெண்ணின் முகத்தினை நீ ஒத்திருக்க விரும்புவாவானால் யான் மட்டும் காணத்தோன்றுவாயாக! பலரும் காணுமாறு தோன்றாதிருப்பாயாக.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நிலவே, மலர் போன்ற கண்களைக் கொண்ட என் காதலியின் முகம் போல நீயும் இருக்க விரும்புவையேல், பலர் பார்க்கத் தோன்றாதே
|
|
Translation
|
|
If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me,
Shine for my eyes alone, O moon, shine not for all to see!.
|
|
Explanation
|
|
O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.
|
|
Transliteration
|
|
Malaranna Kannaal Mukamoththi Yaayin
Palarkaanath Thondral Madhi
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|