Thirukural

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போலமறுவுண்டோ மாதர் முகத்து.

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) (அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது?) அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல - முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு உண்டோ? (இடம் - கலை, மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
குறையிடை நிறைந்த ஒளிர்மதிக்குப்போல இம்மாதர் முகத்துக்கு மறுவுண்டோ?. இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்குக் காரணம் அறிவின்மையாம்; இவள் முகத்து மறுவில்லையாதலான் அது மதியோடு ஒவ்வாதென்று கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
அறுவாய் நிறைத்த அவிர்மதிக்குப் போல - முன் குறைந்தவிடம் நிரம்பிய விளங்கும் மதியத்திற்குப்போல ; மாதர் முகத்து மறு உண்டோ - இப்பெண்ணின் முகத்தில் ஏதேனுங்களங்க முண்டோ ? இல்லையே ! அங்ஙனமிருந்தும் அவ்விண்மீன்கள் வேறுபாடறியாது கலங்கித் திரிவானேன் ? அறுவாய் கரும்பக்கம் , மதியம் முழுநிலா , தேய்தலும் வளர்தலுந் தோன்ற ' அறுவாய் நிறைந்த ' என்றான் . தேய்வுவளர்ச்சிகளும் மறுவுடைமையும் வேறுபாடறிவிக்கவும் , அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு .
கலைஞர் உரை:
தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!.
சாலமன் பாப்பையா உரை:
நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பிரகாசத்தில் பெரும்பாலான நாட்களில் மூளியாகவே இருப்பதும், பூரணமாக இருக்கிற நாளிலும் நடுவில் களங்கமுள்ளதாக இருப்பதும் சந்திரனுக்கு உண்டு. ஆனால் பெண்ணின் முகம் அப்படிப்பட்டதன்று.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இடம் குறைந்து பின்பு நிரம்பி விளங்கும் சந்திரனைப் போல இம்மாதின் முகத்தில் மறுவுண்டோ?
தமிழ்க்குழவி உரை:
பிறையாய் இருந்து வளர்கின்ற போதும் கறைகள் உண்டு நிலவுக்கு. என் காதலியின் முகத்தில் எந்த களங்கமும் இல்லையே.
Translation
In moon, that waxing waning shines, as sports appear, Are any spots discerned in face of maiden here?.
Explanation
Could there be spots in the face of this maid like those in the bright full moon ?.
Transliteration
Aruvaai Niraindha Avirmadhikkup Pola Maruvunto Maadhar Mukaththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1117