|
அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(பகற்குறிக்கண் பூ அணி கண்டு சொல்லியது.) அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் - இவள் தன் மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்; நுசுப்பிற்கு நல்ல பறை படா - இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா. (அம் 'முகிழ்ப்பாரம் பொறாமையின் இடை முரியும். முரிந்தால், அதற்குச் செத்தார்க்கு உரிய நெய்தற்பறையே படுவது' என்பதாம். மக்கட்கு உரிய சாக்காடும் பறை படுதலும் இலக்கணக் குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அனிச்சப்பூவைக் காம்புகள் அறாது மயிரில் அளைந்தாள்: இனி இவளது நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை. இஃது இடையினது நுண்மை கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(பகற்குறிக்கட் பூவணிகண்டு சொல்லியது) அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் - இவள் தன் இடை மென்மையை நோக்காது அனிச்சப்பூவைக் காம்பு கிள்ளாமல் தன் தலைக்கணிந்தாள் ; நுசுப்பிற்கு நல்ல பறை படா - ஆகலால் , இனி இவளிடைக்கு மங்கலப் பறைகள் முழங்கா , அமங்கலப் பறைகளே முழங்கும் . அக் காம்பின் கனத்தைக் தாங்கமாட்டாமல் இவள் கொடியிடை ஒடியும் ; ஒடிந்தாற் சாவுநேரும் ; அன்று அமங்கலப்பறை தான் முழங்கும் , சாவு இடை முறிவால் நேர்வதால் , சாப்பறை முழக்கம் இடையை நோக்கியதாகச் சொல்லப்பட்டது , இடை யொடுக்கத்தை மிகுத்துக் காட்டியதால் இஃது உயர்வு நவிற்சியணி ' படாஅ ' இசை நிறையளபெடை , ' பறை ' பால்பகா வஃறிணைப் பெயர் . பகற்குறியாவது பாங்கியிற் கூட்டக் கால்த்திற் பகல் வேளையில் தலைமகனுந் தலைமகளுங் கூடுதற்குக் குறித்த இடம் .
|
|
கலைஞர் உரை:
|
|
அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
மிகவும் இலேசான அனிச்ச மலரேயானாலும் அதன் காம்பை நீக்காமல் தலையில் சூடிக்கொள்வாளானால் அதன் பிறகு அவளுடைய இடையைப்பற்றி நல்ல பேச்சுப் பிறக்காது. (இடை ஒடிந்து போயிற்று என்ற துன்பச் சொல்தான் பிறக்கும்.)
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இவள் தனது மென்மைத் தன்மையினைக் கருதாமல் அனிச்சப்பூவினைக் காம்பு களையாமல் சூடிக்கொண்டாள். இனி இவன் இடையில் நல்ல பறைகள் ஒலிக்கா!
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அனிச்சப்பூவின் காம்பினை அகற்றாமல், தன் தலையில் சூடிவிட்டாள். அந்த பாரம் தாங்காமல், அவளின் மெல்லிய இடை ஓடிய அங்கு சாப்பறை ஒலிக்கிறதோ?
|
|
Translation
|
|
The flowers of the sensitive plant as a girdle around her she placed;
The stems she forgot to nip off; they 'll weigh down the delicate waist
|
|
Explanation
|
|
No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.
|
|
Transliteration
|
|
Anichchappook Kaalkalaiyaal Peydhaal Nukappirku
Nalla Pataaa Parai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|