|
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் - உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - மானம்விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும். ('கரத்தல்', ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனை 'நோய்' என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர் கழியுவகையராவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு கெடும்' என்றும் கூறினார். இடும்பை - ஆகுபெயர். 'முழுதும் கெடும்' என்று பாடம் ஓதி 'எஞ்சாமற் கெடும்' என்று உரைப்பாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கரப்பிடும்பை இல்லாதரைக் காண்பாராயின், நிரப்பினான் ஆகிய இடும்பை யெல்லாம் ஒருங்கு கெடும். கரப்பிடும்பை யில்லார் என்றமையால் இது செல்வராயினார் மாட்டு இரக்க லாகா தென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கரப்பு இடும்பை இல்லாரைக் காணின்-தம்மிடத்துள்ளதைக் கரத்தலாகிய நோயில்லாதவரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்-தன்மானத்தை விடாது இரப்போருக்கு வறுமையால் வருந்துன்பமெல்லாம் ஒருசேரத் தொலையும். கரத்தல் மறுமை யின்பத்திற் கேதுவான மன நலத்தைக் கெடுத்தலால், அதை நோய் என்றார், நோய் இடும்பைவகைகளுள் ஒன்றாதலின், இடும்பை இங்குநோய் எனப்பட்டது, கரவாதவரைக் கண்டமட்டில் மகிழ்ச்சி பொங்குதலால் ’எல்லாம் ஒருங்கு கெடும்.’ என்றார். காலிங்கர் ’முழுதுங் கெடும்’ என்னும் பாடங் கொள்வர்.
|
|
கலைஞர் உரை:
|
|
இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
வைத்துக்கொண்டே இல்லையென்று மறைக்கும் குற்றம் இல்லாதவர்களாக, உலகத்தில் எல்லாரும் இருந்து விட்டால் வறுமையினால் வரும் எல்லாத் துன்பங்களும், மனிதன் பிச்சை கேட்க வேண்டிய அவசியமேயில்லாததால் உடனே ஒழிந்து போகும். (அது உலகத்தில் முடியாத காரியம். எனவே)
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உள்ளது மறைத்தலாகிய நோய் இல்லாதவர்களைக் கண்டால், மானம் விடாமல் இரப்பார்க்கு வறுமையால் வரும் துன்பங்கள் எல்லாம் ஒரு சேரக்கெடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உள்ளதை மறைக்கின்ற இழிந்த மனம் இல்லாரைச் காணின், வறுமையால் இரந்து நிற்பாரின் துயரம் முழுவதும் அகலும்.
|
|
Translation
|
|
It those you find from evil of 'denial' free,
At once all plague of poverty will flee.
|
|
Explanation
|
|
All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.
|
|
Transliteration
|
|
Karappitumpai Yillaaraik Kaanin Nirappitumpai
Ellaam Orungu Ketum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|