|
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும். (அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அதுநோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அறத்தோடு இயைபில்லாத நல்குரவுடையான், தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அறம் சாரா நல்குரவு-அறத்தோடு பொருந்தாத வறுமையை யுடையவன்; ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப் படும்-தன்னைப் பெற்று வளர்த்த தாயாலும் அயலான்போல புறக்கணிக்கப்படுவான். அறஞ்சாராமை யாவது, முற்பிறப்பில் அறஞ்செய்யாமையால் கரணியத் தொடர்பும் , இப்பிறப்பில் அறஞ்செய்ய முடியாமையால் கருமியத் தொடர்பும் இன்மை. ’நல்குரவு’ ஆகு பொருளது. உயர்வு சிறப்பும்மை பெற்றதாயின் இயற்கையான அன்புச் சிறப்பைக் காட்டி நின்றது. கொள்வதொன்று மின்மையோடு கொடுக்கவும் நேர்தல் பற்றி, வறியவனை உறவினரெல்லாரும் துறப்பர் என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(புண்ணியப் பலன் சிறிதளவுகூட இல்லாதவனுக்கு நீங்காத வறுமை இருக்கும். அதோடு) புண்ணியப் பலன்கள் இல்லாததால் உண்டாகிற நீடித்த தரித்திரத்தை அடைந்துவிட்டவன் பெற்றெடுத்த தாயாலும்கூட அன்னியன் போல அசட்டை செய்யப்படுவான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அறத்தொடு பொருந்தாத வறுமையினையுடையவன் தன்னைப் பெற்றெடுத்த தாயாராலும் யாரோ ஒருவனைப் போல நோக்கப்படுவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறத்துடன் பொருந்தாத வறுமை என்பது ஒருவனுக்கு பெற்ற தாயால் கூட பிறன் போலப் பார்க்க வைக்கும்.
|
|
Translation
|
|
From indigence devoid of virtue's grace,
The mother e'en that bare, estranged, will turn her face.
|
|
Explanation
|
|
He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.
|
|
Transliteration
|
|
Aranjaaraa Nalkuravu Eendradhaa Yaanum
Piranpola Nokkap Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|