Thirukural

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொற்பொருள் சோர்வு படும்.

நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும். (பொருளின்மையைத் தலைப்படுதலாவது 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும் என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும். ஏற்றுக்கொள்வாரில்லை என்றவாறாயிற்று. இது கல்வி கெடும்: சுற்றத்தாரும் கைவிடுவ ரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நல்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும்-சிறந்த நூற்பொருளைத் தெளிவாக அறிந்து விளக்கமாகவும் இனிதாகவும் எடுத்துச் சொன்னராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வுபடும்-வறியவர் சொல்லுஞ் சொல் தன் பொருட் சிறப்பை இழந்துவிடும். பொருட் சிறப்பிழத்தல், கேட்பாரின் இகழ்ச்சியினாலும் பொருளுதவி வேண்டுவாரென்னும் அச்சத்தினாலுமாம். ’’நொய்தாந் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தாம் இரப்போன் நுவலுங்கால்-நொய்யசிறு பஞ்சுதனின் நொய்யானைப் பற்றாதோ காற்றெனின் அஞ்சும்அவன் கேட்ப தறிந்து.’’ என்னும் நீதிவெண்பாச் செய்யுள் இங்கு நினைக்கத்தக்கது. உம்மை உயர்வு சிறப்பு.
கலைஞர் உரை:
அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(வறுமை இருந்தும் குற்றம் செய்யாதவர்களும் உண்டு. ஆனாலும் அவர்களை யாரும் மதிக்கமாட்டார்கள். அவர்கள்) நல்ல அறிவை ஆராய்ச்சியுடன் சொன்னாலும் ஏழைகள் சொல்லுகின்ற அறிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் பயனற்றவையாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நல்ல நூல்களின் பொருள்களை நன்கு அறிந்துணர்ந்து சொன்னாலும் வறுமையில் இருப்பவரது, சொல்லானது பொருள் இல்லாது பயனின்றிப் போகும்.
தமிழ்க்குழவி உரை:
சிறந்த பொருளைத் தேர்ந்து தெளிவாகப் பேசினும் வறுமையுற்றார் வாய்ச்சொல் அதற்குரிய மதிப்பைப் பெறாது.
Translation
Though deepest sense, well understood, the poor man's words convey, Their sense from memory of mankind will fade away.
Explanation
The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.
Transliteration
Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar Sorporul Sorvu Patum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1046