Thirukural

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல்.

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒருவற்கு நல்லாண்மை என்பது - ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் - தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல். (போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். குடியினையாளுந் தன்மை - குடியிலுள்ளாரை உயரச்செய்து தன் வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும்.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு மிக்க ஆண்மையென்று சொல்லப்படுவது, தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை மனத்தின்கண் போக்கிக் கோடல். ஆளுதலுடைமை- குடியோம்புதலை எப்பொழுதுஞ் சிந்தித்தல். எனவே இது குடியோம்புதல் வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒருவற்கு நல் ஆண்மை என்பது-ஒருவனுக்கு நல்ல ஆண்மையென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல் ஆண்மை ஆக்கிக் கொளல்-தான் பிறந்த குடியை ஆளுந் தன்மையைத் தனக்கு உண்டாக்கிக் கொள்ளுதல். குடியாளுந் தன்மையாவது குடியிலுள்ள வரை முன்னேற்றித் தன் வயப்படுத்துதல். பேராண்மையினின்று வேறுபடுத்தற்கு ’நல்லாண்மை’ யென்றார். இவ்விரு குறளாலும் குடிசெய்வாரின் தலைமை கூறப்பட்டது.
கலைஞர் உரை:
நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
ஒருவனுக்குச் சிறப்புண்டாக்கும் வல்லமை என்று சொல்லத்தக்கது எதுவெனில், (குற்றமற்ற உழைப்பின் மூலம்) அவன்தான் பிறந்த குடும்பத்தை வலிமையுள்ளதாகச் செய்து கொள்வதே.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று உயர்த்திச் சொல்லப்படுவது எதுவென்றால் தான் பிறந்த குடியிலுள்ள மக்களைத் தன்வயப்படுத்தி ஆளும் தன்மையினைத் தனக்கு உள்ளதாக்கிக் கொள்ளுதலாகும்.
தமிழ்க்குழவி உரை:
ஒருவர்க்கு நல்லாண்மை எனப்படுவது யாதெனில் தான் பிறந்த குடும்ப நன்மைக்காக உழைத்து இல்லத்தின் ஆளுமையைத் தனதாக்கிக் கொள்ளல்.
Translation
Of virtuous manliness the world accords the praise To him who gives his powers, the house from which he sprang to raise.
Explanation
A man's true manliness consists in making himself the head and benefactor of his family.
Transliteration
Nallaanmai Enpadhu Oruvarkuth Thaanpirandha Illaanmai Aakkik Kolal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1026