Thirukural

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்சுற்றமாச் சுற்றும் உலகு.

குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை - குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு - அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார். (குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
குற்றப்பட ஒழுகுத லினாய்த் தன்குடியை யோம்பி வாழுமவனை உலகத்தாரெல்லாரும் தமக்குற்ற சுற்றமாக நினைத்துச் சூழ்ந்துவரும்.
தேவநேயப் பாவாணர் உரை:
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானை-ஒரு குற்றமுஞ் செய்யாது தன் குடியை யுயரச் செய்தொழுகுவானை; உலகு சுற்றமாச் சுற்றும்-அவன் குடியைச் சேர்ந்தார் அனைவரும், அவனுக்குச் சுற்றமாயிருத்தலை விரும்பித் தாமே சென்று அவனைச் சூழ்வர். குற்றங்கள் அறநயன் (நீதி) முறை (நியாயம்) நடுநிலைகட்கு மாறான செயல்கள். சுற்றம் உறவினராகச் சுற்றியிருக்கும் கூட்டம். உலகு’ வரையறுத்த ஆகுபெயர்.
கலைஞர் உரை:
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
குற்றமில்லாத வழிகளில் பாடுபட்டுத் தன் குடித்தனத்தின் உயர்வுக்காக முயற்சி செய்து வாழ்கின்றவனை உலகத்தார் உறவாகச் சூழ்ந்து உதவுவார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
குற்றம் யாதும் செய்யாமல் தன் குடியை உயரச் செய்து ஒழுகுவானை உலகத்தார் தாமே சென்று சூழ்ந்து கொள்வார்கள்.
தமிழ்க்குழவி உரை:
குற்றம் இல்லாதவனாய், தன் குடும்பத்தின் மேன்மைக்காக நாளும் உழைப்பவனைத் தன் சுற்றமாகக் கொண்டு பாராட்டும் உலகு.
Translation
With blameless life who seeks to build his race's fame, The world shall circle him, and kindred claim.
Explanation
People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.
Transliteration
Kutram Ilanaaik Kutiseydhu Vaazhvaanaich Chutramaach Chutrum Ulaku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1025