|
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது.
இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
காலத்தினால் செய்த நன்றி- ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் நெருக்கடி வேளையில் அதை நீக்க இன்னொருவன் செய்த வுதவி; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது- பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாயிருந்தாலும், அக்கால நிலைநோக்க நிலவுலகத்தினும் பெரிதாம்.
ஒருவர் செய்த நன்றியை அது செய்யப்பட்ட காலநிலைக்கேற்ப மதிக்க வேண்டுமென்பது கருத்து. 'காலத்தினால்' என்பது காலத்தாலே வந்தான் என்னும், மேலைவடார்க்காட்டு வழக்குப் போன்ற வேற்றுமை மயக்கம்.
|
|
கலைஞர் உரை:
|
|
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும்,
அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
ஒருவர் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அது செய்யப்பட்ட சமய சந்தர்ப்பத்தை ஒட்டி அதை இந்த உலகத்தை விடப் பெரிதாக மதிக்கவேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் காலமறிந்து அறிய காலத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அக்காலத்தினை நோக்க அது இவ்வுலகத்தினையும் விட மிகவும் பெரியதாகக் கருதப்படும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உரிய நேரத்தில் ஒருவர் செய்யும் உதவி அளவில் சிறியதாயினும் அதன் பயனை எண்ணிப் பார்க்கின் இவ்வுலகிலும் பெரியதாகும்.
|
|
Translation
|
|
A timely benefit, -though thing of little worth,
The gift itself, -in excellence transcends the earth.
|
|
Explanation
|
|
A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.
|
|
Transliteration
|
|
Kaalaththi Naarseydha Nandri Siridheninum
Gnaalaththin Maanap Peridhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|