Thirukural

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாணாள் பவர்.

நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார்; நாணால் உயிரைத் துறப்பர் - அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நாண் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பர்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார். (உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நாணுடைமைப் பொருட்டாக உயிரைத் துறப்பார்: உயிர்ப் பொருட்டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுபவர். இது நாண் உயிரினும் சிறந்ததென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நாண் ஆள்பவர்-நாணை உயிர்நாடிப் பண்பாகக் கொள்பவர்; நாணால் உயிரைத் துறப்பர் -நாணும் உயிருந் தம்முள் மாறானவிடத்து நாணைக் காத்தற் பொருட்டு உயிர் நீப்பர் ; உயிர் பொருட்டு நாண் துறவார் - உயிரை காத்தற் பொருட்டு நாணினை நீக்கார். 'உயிரினும் நாண் சிறந்த்தென்பது கருத்து. உயிரினும் சிறந்தன்று நாணே.' (தொல், கள 22) இவ்விரு குறளாலும் நாணுடையார் செயல் கூறப்பட்டது. 'ஆல் ' அசைநிலை.
கலைஞர் உரை:
நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்‌.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அது மட்டுமன்று) நாணுடைமை தவறாத சான்றோர்கள் நாணத்துக்காக உயிரை விடுவார்களே யல்லாமல் உயிரைப் பெரிதாக எண்ணி நாணத்தை விட்டுவிட மாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நாணத்தினது சிறப்பினை அறிந்து அதன்வழி நிற்பவர்கள் அந்த நாணமும் உயிரும் தம்முள் மாறுபட்ட போது நாணத்தினைக் காக்க உயிரை விடுவார்களே தவிர, உயிரைக் காப்பாற்ற நாணத்தினை விட்டுவிட மாட்டார்கள்.
தமிழ்க்குழவி உரை:
சான்றோர்கள் நாண் என்னும் நற்பண்பைக் காத்தலின் பொருட்டு உயிரையும் துறப்பர். ஆனால் உயிர்வாழ வேண்டுமென்பதற்காக நாணத்தைத் துறவார்.
Translation
The men of modest soul for shame would life an offering make, But ne'er abandon virtuous shame for life's dear sake.
Explanation
The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.
Transliteration
Naanaal Uyiraith Thurappar Uyirpporuttaal Naandhuravaar Naanaal Pavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1017