|
பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவர்.(ஒப்ப மதித்தல் - அதுவும் தமக்கு வந்ததாகவே கருதுதல். அக்கருத்துடையர் பெரியராகலின் அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியைப்போல அஞ்சி நாணுமவர்களை நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார். இது தம்பழிக்கு அஞ்சி நாணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் அஞ்சி நாண வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார்- பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து அவ்விரண்டிற்கும் நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணிற் குறைவிடமென்று சொல்வர். ஒப்ப மதித்தலாவது பிறர் பழியையும் தம் பழி போற் கருதுதல், 'உலகு' ஆகுபெயர்.
|
|
கலைஞர் உரை:
|
|
தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(சான்றாண்மைக்கு ஆதாரமாகிய நாணுடைமைக்கு இருப்பிடம்) பிறருக்குப் பழி வருவதையும் தமக்குப் பழி வருவதைப்போலவே அஞ்சி நடப்பவர்கள் 'நாணுடைமை' என்னும் நற்குணத்துக்கு இருப்பிடமானவர்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒரு சமமாக மதித்து நாணுவாரை, உலகத்தார் நாணம் என்பதற்கு உறைவிடம் என்று கூறுவர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிறருக்கு ஏற்படும் பழியையும் தமக்கு ஏற்படும் பழியையும் கண்டு நாணுவார் நாணமென்னும் பண்புக்கு உறைவிடமாய் அமைவார்
|
|
Translation
|
|
As home of virtuous shame by all the world the men are known,
Who feel ashamed for others, guilt as for their own.
|
|
Explanation
|
|
The world regards as the abode of modesty him who fear his own and other's guilt.
|
|
Transliteration
|
|
Pirarpazhiyum Thampazhiyum Naanuvaar Naanukku
Uraipadhi Ennum Ulaku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|