Thirukural

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குஉறைபதி என்னும் உலகு.

பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவர்.(ஒப்ப மதித்தல் - அதுவும் தமக்கு வந்ததாகவே கருதுதல். அக்கருத்துடையர் பெரியராகலின் அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியைப்போல அஞ்சி நாணுமவர்களை நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார். இது தம்பழிக்கு அஞ்சி நாணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் அஞ்சி நாண வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார்- பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து அவ்விரண்டிற்கும் நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணிற் குறைவிடமென்று சொல்வர். ஒப்ப மதித்தலாவது பிறர் பழியையும் தம் பழி போற் கருதுதல், 'உலகு' ஆகுபெயர்.
கலைஞர் உரை:
தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(சான்றாண்மைக்கு ஆதாரமாகிய நாணுடைமைக்கு இருப்பிடம்) பிறருக்குப் பழி வருவதையும் தமக்குப் பழி வருவதைப்போலவே அஞ்சி நடப்பவர்கள் 'நாணுடைமை' என்னும் நற்குணத்துக்கு இருப்பிடமானவர்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒரு சமமாக மதித்து நாணுவாரை, உலகத்தார் நாணம் என்பதற்கு உறைவிடம் என்று கூறுவர்.
தமிழ்க்குழவி உரை:
பிறருக்கு ஏற்படும் பழியையும் தமக்கு ஏற்படும் பழியையும் கண்டு நாணுவார் நாணமென்னும் பண்புக்கு உறைவிடமாய் அமைவார்
Translation
As home of virtuous shame by all the world the men are known, Who feel ashamed for others, guilt as for their own.
Explanation
The world regards as the abode of modesty him who fear his own and other's guilt.
Transliteration
Pirarpazhiyum Thampazhiyum Naanuvaar Naanukku Uraipadhi Ennum Ulaku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1015