Thirukural

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடியுண் டாயினும் இல்.

பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை. (இன்பத்தினும் அறம் சிறந்தமையின்,கொடுத்தல் தொழில் முற்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.)
மணக்குடவர் உரை:
பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்குப் பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும்.
தேவநேயப் பாவாணர் உரை:
கொடுப்பதும் துய்ப்பதும் இல்லார்க்கு -பிறருக்கீவதும் தாம் நுகர்வது மாகிய இரண்டுமில்லாதவருக்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல்-கோடிக் கணக்கான செல்வமிருப்பினும் அது செல்வமிருப்பதாகாது. செல்வத்தின் இரு பயனுமின்மையால் ' இல் ' என்றார். இன்பத்தினும் அறஞ் சிறந்தமையால் முற்கூறப்பட்டது. ' கோடி' அளவையாகு பெயர். ' கொடுப்பதூஉம் ' , ' துய்ப்பதூஉம் ' இன்னிசை யளபெடைகள்.உம்மை உயர்வு சிறப்பு. "எனதென தென்றிருக்கு மேழை பொருளை எனதென தென்றிருப்பன் யானும் - தனதாயின் தானு மதனை வழங்கான் பயன்றுவ்வான் யானு மதனை யது" (நாலடி.276) என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.
கலைஞர் உரை:
கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனால்) பிறருக்குக் கொடுப்பது, தாம் அனுபவிப்பது ஆகிய இரண்டும் இல்லாதவர்கள் கோடி கோடியாகச் செல்வத்தைச் சேர்த்து வைத்தாலும் அவர்களுக்கு அதனால் ஒரு பயனுமில்லை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பிறர்க்கு ஈகை செய்வதும் தாம் நுகர்வதும் ஆகிய இரண்டு செய்கையும் இல்லாதவர்களுக்கும் பலவாக அடுக்கிய கோடிப் பொருள உண்டாயினும் பயன் ஒன்றும் இல்லையாம்.
தமிழ்க்குழவி உரை:
பிறர்க்குக் கொடுத்து உதவாமலும் தானும் உண்டு மகிழாமலும் இருப்பார்க்கு பலகோடி செல்வம் இருந்தும் என்ன பயன்?
Translation
Amid accumulated millions they are poor, Who nothing give and nought enjoy of all they store.
Explanation
Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.
Transliteration
Kotuppadhooum Thuyppadhooum Illaarkku Atukkiya Kotiyun Taayinum Il

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1005