|
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் - சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார் - ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும் தாம் திரியார். (சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். 'பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ'(புறநா.330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
சால்புடைமையாகிய கடற்குக் கரையென்று சொல்லப்படுவார், ஏனைக் கடலுங் கரையுள் நில்லாமற் காலந் திரிந்தாலும் தாம்திரியார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சான்றாண்மைக்க ஆழி எனப்படுவார் - சால்பு என்னும் கடலிற்குக் கரையாகச் சொல்லப்படுவார்; ஊழிபெயரினும் - ஊழிமுடிந்து உவர்க்கடல் கரைகடப்பினும் ; தாம் பெயரார் - தாம் தம் சால்பெல்லை கடவார். சால்பின் பெருமை பற்றி அதனைக் கடலாக்கியும் , அதன் எல்லையில் நிற்றலின் அதை யுடையாரை அதன் கரையாக்கியும், கூறினார்.
|
|
கலைஞர் உரை:
|
|
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
நற்குணங்கள் நிரம்பிய கடல் போன்ற சான்றோர்கள் யுகப் புரட்சி ஏற்பட்டு உலகங்களெலல்லாம் நிலைகலங்கினாலும் தாம் தம்முடைய நிறை குணத்தில் நிலை கலங்கமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
சான்றாண்மை என்கின்ற கடலுக்குக்கரை என்று சொல்லப்படுவோர், அக்கடலும் கரையுள் நில்லாமல் காலம் திரிந்தாலும் தாம் திரிய மாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கடல்போல சான்றாண்மைக்கு நிறைகலனாய்த் திகழ்பவர் இயற்கையே தன் நிலையில் பிறழ்ந்தாலும், தான் பிறழ்வதில்லை.
|
|
Translation
|
|
Call them of perfect virtue's sea the shore,
Who, though the fates should fail, fail not for evermore.
|
|
Explanation
|
|
Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.
|
|
Transliteration
|
|
Oozhi Peyarinum Thaampeyaraar Saandraanmaikku
Aazhi Enappatu Vaar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|