Thirukural

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கள் உண்ணாப் போழ்தில் களித்தானை - கள் உண்பானொருவன் தான் அஃது உண்ணாது தெளிந்திருந்த பொழுதின்கண் உண்டுகளித்த பிறனைக் காணுமன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான் கொல் - காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும். (சோர்வு - மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல். கருதல் அளவையான் அதன் இழுக்கினை உய்த்துணரின் ஒழியும் என இதனால் அஃது ஒழிதற் காரணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு களித்தவனைக் கண்டவிடத்துத் தான் கள்ளுண்டபோழ்து தளக்குள்ளதாகுஞ் சோர்வினை நினையான்போலும்; நினைப்பானாயின் தவிரும்.
தேவநேயப் பாவாணர் உரை:
கள் உண்ணப் போழ்தில் - கள்ளுண்பா னொருவன் தான் அதை உண்ணாது தெளிந்திருக்கும் வேளையில்; களித்தானைக் காணுங்கால் - கள்ளுண்டு வெறித்த பிறனைக்காணும்போது; உண்டதன் சோர்வு உள்ளான் கொல்- தான் உண்டபொழுது தனக்கிருந்த மயக்கத்தையும் உவமையளவையாலறிந்து, அதுவும் இத்தகையதே யென்று கருதான் போலும். கள்ளுண்டு வெறித்த நிலையின் இழிவை, உவமையளவையாலும் அறிந்தபின்னும் திருந்தாத கட்குடியன் நிலைமை நோக்கி, ஆசிரியர் வருத்திக் கூறியவாறு. 'கொல்' ஐயம்.
கலைஞர் உரை:
ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
கள்ளுண்ணும் பழக்கமுள்ளவர்கள், கள்ளை உண்ணா திருக்கிற சமயத்தில் கள்ளுண்டு போதையினால் தள்ளாடுகிற வேறொரு வனைப் பார்க்கிற போதாவது கள்ளுண்பதனால் உண்டாகும் தடுமாற் றத்தை எண்ணிப் பார்க்க மாட்டானா! (அப்போது மன மாறுதல் ஏற்பட்டால்தான் உண்டு.)
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கள்ளுண்பான் ஒருவன் தான் உண்ணாதிருந்த போது கள்ளுண்டு களிப்பவன் நிலைமையினைக் கண்டு, தான் உண்டபோதும், 'இப்படித்தான் இருந்திருப்பான்" என்று கருத மாட்டான் போலும்!
தமிழ்க்குழவி உரை:
ஒருவன் மதுவருந்தாத போது, மதுவருந்திய ஒருவன் தன்நிலை பிறழ்ந்து கிடப்பதைக்காணின், தானும் இந்நிலைக்கு ஆளாவோமே என்று எண்ணுவானா?
Translation
When one, in sober interval, a drunken man espies, Does he not think, 'Such is my folly in my revelries'?.
Explanation
When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.
Transliteration
Kallunnaap Pozhdhir Kaliththaanaik Kaanungaal Ullaankol Untadhan Sorvu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 930