Thirukural

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார்.

கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கள்ளை உண்ணற்க - அறிவுடையராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதொழிக; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க - அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்க. (பெறுதற்கரிய அறிவைப் பெற்று வைத்தும் கள்ளான் அழித்துக் கொள்வாரை, இயல்பாகவே அஃது இல்லாத விலங்குகளுடனும் எண்ணாராகலின் 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார்.)'
மணக்குடவர் உரை:
கள்ளினை உண்ணாதொழிக; உண்ணவேண்டின் சான்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க.
தேவநேயப் பாவாணர் உரை:
கள்ளை உண்ணற்க - உயிரையும் மதிப்பையுங் காத்துக் கொள்ள விரும்புபவர் கள்ளை உண்ணாதிருக்க; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க - அங்ஙனமன்றி உண்ணவே விரும்பின், அறிவுடையோரால் மக்களாகக் கருதப்படுதலை விரும்பாதவர் உண்க. ஆறறிவிற்குரிய மக்கட்பிறப்பையும் அதனாற் பெறக்கூடிய கல்வியறிவையும் பெற்றும், கட்குடியால் அவற்றை யிழந்துவிடுதலால், இயற்கையாகவே அவையில்லாத அஃறிணையினுங் கீழாகிப் பொதுவான உயிரினத்திலும் சேர்க்கப்படார் என்னுங் கருத்துத் தோன்ற , 'எண்ணப்பட வேண்டாதார்' என்றார்.
கலைஞர் உரை:
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆகையினால்) கள்ளைக் குடிக்க வேண்டா. அறிவொழுக் கங்களாற் சிறந்த மேன்மக்களால் மதிக்கப்படுவதை வேண்டாதவர்கள் குடித்தால் குடிக்கட்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அறிவுடையவர்கள் கள்ளினை உண்ணா திருக்கக் கடவர், நல்லவர்களால் மதிக்கப்பட விரும்பாத வர்கள் உண்ணுவார்களாக, என்பதாம்.
தமிழ்க்குழவி உரை:
உண்ணாதீர் மதுவை, சான்றோரால் மதிக்கப்படாத ஓர் இழிநிலை அடைய வேண்டுமெனில் மட்டுமே உண்பீராக.
Translation
Drink not inebriating draught. Let him count well the cost. Who drinks, by drinking, all good men's esteem is lost.
Explanation
Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.
Transliteration
Unnarka Kallai Unilunka Saandroraan Ennap Pataventaa Thaar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 922