Thirukural

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்திருநீக்கப் பட்டார் தொடர்பு.

இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் - கவர்த்த மனத்தினையுடைய மகளிரும் கள்ளும் சூதும் என இம்மூன்றும்; திருநீக்கப்பட்டார் தொடர்பு - திருமகளால் துறக்கப்பட்டார்க்கு நட்பு. (இருமனம் - ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒரு காலத்தேயுடைய மனம். கவறு - ஆகுபெயர். ஒத்த குற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன. வடநூலாரும் இக்கருத்தான் 'விதனம்' என உடன் கூறினார். வருகின்ற அதிகார முறைமையும் இதனான் அறிக. திணைவிராய் எண்ணியவழிப் பன்மைபற்றி முடிபு கோடலின் ஈண்டு அஃறிணையாற் கொண்டது. திரு நீக்கப் பட்டமை இக்குறிகளான் அறியப்படும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் சேர்வார் இழிந்தோர் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கவர்த்த மனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும் திருமகளால் கடியப்பட்டாரது நட்பு. இது நல்குரவாவார் சார்வரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் -இரு வேறுபட்ட மனத்தையுடைய விலைமகளிரும் கள்ளும் சூதும்; திருநீக்கப்பட்டார் தொடர்பு - திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாம். பொருள்மேல் விருப்பும் ஆள்மேல் விருப்பின்மையுமாக உடம்பாற் கூடுதலும் உள்ளத்தாற் கூடாமையும் ஒருங்கே யுடையார் மனத்தை 'இருமனம்' என்றார். வரைவின் மகளிர்போன்றே கள்ளுஞ் சூதும் பொருட் பகையாதலின் , உடன் கூறப்பட்டன.இதனால் அடுத்துவரும் ஈரதிகாரங்கட்கும் தோற்றுவாய் செய்யப்பட்டது. "பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப் பெயர் அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே." (தொல்.534) என்றவாறு, இங்கு இருதுணையும் விரவிவந்த எழுவாய்கள் 'தொடர்பு' என்னும் அஃறிணை முடிபு கொண்டன.'திரு' ஆகுபெயர். மூவகையுறவுகளுள் ஏதேனுமொன்றிருப்பினும் , புதிதாகப் பொருள் சேராமையோடு இருந்த பொருளும் போய்விடும் என்பதாம். இந்நான்கு குறளாலும் விலைமகளிரொடு கூடுவோர் இழிந்தோர் என்பது கூறப்பட்டது.
கலைஞர் உரை:
இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(சுருங்கச் சொன்னால்) இருமனமுள்ள விலை மாதரும், கள்குடியும், சூதாட்டமும் திருமகளாகிய இலட்சுமியால் விலக்கப் பட்டவர்களுடைய உறவுகள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இருவித மனத்தினையுடைய மகளிரும், கள்ளும், சூதும் என்ற இம்மூன்றும் செல்வத்தால் நீக்கப் பட்டவர்களுக்கு நட்புடையவையாகும்.
தமிழ்க்குழவி உரை:
இருவேறு மனத்துடன் பழகும் பெண்டிரும், மதுவும், சூதும் ஒருவர்க்குத் தன் பெருமைகளை செல்வத்தை இழக்கவைக்கும் தொடர்புகள்.
Translation
Women of double minds, strong drink, and dice; to these giv'n o'er, Are those on whom the light of Fortune shines no more.
Explanation
Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune.
Transliteration
Irumanap Pentirum Kallum Kavarum Thiruneekkap Pattaar Thotarpu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 920