Thirukural

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர்.

இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மதி நலத்தின் மாண்ட அறிவினர் - இயற்கையாகிய மதிநன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவினையுடையார்; பொது நலத்தார் புல்நலம் தோயார் - பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார்.(மதி நன்மை - முற்பிறப்புக்களில் செய்த நல்வினைகளான் மனம் தெளிவு உடைத்தாதல். அதனான் அன்றிக் கல்வியறிவு மாட்சிமைப்படாமையின், 'மதிநலத்தின் மாண்ட அறிவினவர்'என்றும்,அவ்வறிவுடையார்க்கு அவராசையது பொதுமையும் மெய்ந்நலத்தது புன்மையும் விளங்கித் தோன்றலின், 'தோயார்'என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறிவுடையார், எல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார். இது புத்திமான் சேரானென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மதி நலத்தின் மாண்ட அறிவினவர்- இயற்கையான மதி நுட்பத்தால் மாட்சிமைப்பட்ட செயற்கையான கல்வியறிவினையுடையார்; பொது நலத்தார் புல் நலம் தோயார் - பொருள் கொடுத்தாரெல்லாரும் பொதுவாக நுகர்தற்குரிய விலைமகளிராற் பெறும் இழிந்த சிறிய இன்பத்திற் படியார். இயற்கையான மதிநலம் முற்பிறப்புகளிற் செய்த நல்வினைகளாலும் கற்ற கல்வியாலும் அமைவது. மதிநலத்தாலேயே கல்வியறிவு மாட்சிமைப் படுதலால் 'மதிநலத்தின் மாண்டறிவினவர்' என்றும், மாட்சிமைப்பட்ட அறிவினர்க்கு விலைமகளிர் நலத்தின் பொதுமையும் புன்மையும் விளங்கித் தோன்றுதலால் 'தோயார்' என்றும், கூறினார்.
கலைஞர் உரை:
இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
புத்திக் கூர்மையுள்ள சிறந்த அறிவாளிகள் (பொது மக்களுள் யாருக்கானாலும் விலைக்கு விற்கவென்றே) தம்மை அழகு படுத்திக்கொள்ளும் விலைமாதரின் அற்ப சுகத்தில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இயற்கையான மதி நன்மையினால் மாட்சி மைப்பட்டு செயற்கை அறிவினையும் உடையவர்கள், பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவான ஆசை யுடைய மகளிரது புல்லிய நலத்தினைத் தீண்டார்கள்.
தமிழ்க்குழவி உரை:
மதிநலத்தால் உலகில் மாண்புடன் வாழும் சான்றோர், பொதுமகளிர் தரும் இழிந்த சுகத்திற்கு ஆட்பட மாட்டார்.
Translation
From contact with their worthless charms, whose charms to all are free, The men with sense of good and lofty wisdom blest will flee.
Explanation
Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights of those whose favours are common (to all).
Transliteration
Podhunalaththaar Punnalam Thoyaar Madhinalaththin Maanta Arivi Navar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 915