Thirukural

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து.

மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல்தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து - நாணி்னையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து. ('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் - ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துக்கோடற் சிறப்புத் தோன்றப் 'பெண்ணே' எனப் பிரித்தார்.)
மணக்குடவர் உரை:
பெண்டிர் ஏவின தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின், நாணமுடைய பெண்மையே தலைமை உடைத்தாம். இது பிறரால் மதிக்கப்படாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின்- நாணமின்றித் தன் மனைவிக்கு ஏவல் தொழில் செய்து வாழ்பவனின் ஆண்டன்மையைவிட ;நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து-நாணமுள்ள ஒரு பெண்ணின் பெண்டன்மையே மேன்மை யுடையது. உறழ்ந்து கூறப்பட்ட ஆண் பெண் இருவருள் பெண்ணிற்கு 'நாணுடை' என்று அடை கொடுத்தலால், ஆணிற்கு நாணின்மை பெறப்பட்டது.நாணின்மையும் தன் ஆண்மையைக் காவாதும் இருப்பவனின் ஆண்பான்மையினும்,நாணத்தொடு கூடியும் தன் பெண்மையைக் காத்துக் கொண்டும் இருப்பவளின் பெண்பான்மை மேம்பட்டதென்பதாம்.நாணஞ் சிறந்தபெண் தன் கணவனை ஏவல் கொள்ள விரும்பாளாதலின், இங்குப் பெண் என்றது பெண்வழிச் செல்வானின் மனைவி யல்லாத பெண்ணென்று கொள்வதே சிறந்ததாம். 'ஏவல்' ஆகுபெயர்.'பெண்' ஆகுபொருளது. ஏகாரம் பிரிநிலை.ஆண்மை மறத்தொடு கூடிய ஆளுந்தன்மை; பெண்மை- விரும்பப்படுந் தன்மையொடு கூடிய அமைதித்தன்மை.
கலைஞர் உரை:
ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(மனைவியிடத்தில் ஆசையினாலோ, பணிவினாலோ, அச்சத்தினாலோ எப்படியானாலும்) பெண்ணின் கட்டளைக்கு அடங்கி அவள் சொன்னபடி செய்து வாழும் ஆண் பிள்ளையைவிட நாணமுள்ள பெண்ணே சிறப்புடையவள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நாணம் இல்லாமல் இல்லாளுக்கு ஏவல் தொழில் செய்து திரிகின்றவனுடைய ஆண் தன்மை யினைவிட நாணமுடைய பெண் தன்மையே பெருமை யுடையதாகும்.
தமிழ்க்குழவி உரை:
பெண்ணுக்கு ஏவல் செய்து வாழும் ஒருவனுடைய ஆண்மையை விட நாணத்தை இயல்பாகக் கொண்ட பெண்ணே பெருமைக்குரியவள்.
Translation
The dignity of modest womanhood excels His manliness, obedient to a woman's law who dwells.
Explanation
Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.
Transliteration
Penneval Seydhozhukum Aanmaiyin Naanutaip Penne Perumai Utaiththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 907