Thirukural

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல்.

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். (நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார்.இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக'(சீவக.மண்மகள்.217) என்றார் பிறரும்.)
மணக்குடவர் உரை:
மனையாளை அஞ்சுவான், எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும். இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
இல்லாளை அஞ்சுவான் - தன் மனைவிக்கு அஞ்சி நடப்பவன்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளைக்கொண்டும் நல்லவர்க்கு நல்லவை செய்ய எப்போதும் அஞ்சுவான். நல்லார்; அரசனொழிந்த ஐங்குறவர், சான்றோர், அருந்தவர்,நல்விருந்தினர் முதலியோர். நல்லவை செய்தல் விருந்தோம்பலும் வேளாண்மை செய்தலும்.விழாநாளிலும் மனைவி மகிழ்ந்திருக்கும் போதும் என்பார் 'எஞ்ஞான்றும் ' என்றார். "இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்றநெஞ்சிற் புல்லாள னாக" என்பது சிந்தாமணி(2319). "இருந்து முகந்திருத்தி யீரோடு பேன்வாங்கி விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக ஆடினாள் பாடினா ளாடிப் பழமுறத்தாற் சாடினா டோடத் தான்." என்னும் பிற்காலத் தௌவையா ரொருவர் தனிப்பாடல் கடைப்பட்ட பெண்ணஞ்சி நிலைமையைக் குறிக்கும்.
கலைஞர் உரை:
எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.
சாலமன் பாப்பையா உரை:
தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஏனென்றால்) எல்லாக் காரியத்துக்கும் மனைவிக்குப் பயந்து நடக்கிறவன் நல்லவர்களுக்கு உதவி செய்யவும் பயப்படுவான். (அதனால் நல்லவர்களுடைய வாழ்த்தும் உதவியும் அவனுக்குக் கிடைக்கமாட்டா.)
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தனது மனையாளுக்கு அஞ்சி நடப்பவன் தான் தேடிய பொருளேயானாலும் நல்லவர்களுக்கு எப்போதும் நல்லன செய்தற்கு அஞ்சி இருப்பவனாவான்.
தமிழ்க்குழவி உரை:
மனைவிக்குப் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன் நல்லார்க்கு நல்லன செய்வதற்கும் அச்சம் உடையவனாக இருப்பான்.
Translation
Who quakes before his wife will ever tremble too, Good deeds to men of good deserts to do.
Explanation
He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.
Transliteration
Illaalai Anjuvaan Anjumar Regngnaandrum Nallaarkku Nalla Seyal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 905