|
கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம். (மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர். அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம். அஃது, அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்ல விடாமையின், விடற்பாற்று என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்: யாதானும் ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை. இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி அவர்தம்மையே காதலிப்பார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மனை விழைவார் மாண்பயன் எய்தார்- இன்பம் பற்றி மனைவியை அளவறிந்து காதலித்து அவள் விருப்பப்படி நடப்பவர் சிறந்த பயன் தரும் அறத்தினைச் செய்யார்; வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது-இனி இன்பத்திற்கும் அறத்திற்குமேதுவான பொருளீட்டுதலை விரும்பி மேற்கொள்வார்,அதற்குத் தடையென்று கருதி விரும்பாத செய்தியும் மனைவிக்கு அடிமையாக்கும் அப்பெண்ணின்பப் பித்தமே. 'மனை' ஆகுபெயர்.' விழைதல்' ஆகுபெயர் போன்ற ஆகுவினை.'பயன்' என்றது அறப்பயனை இம்மைக்கேயுரிய பெண்ணின்பத்திலும் மும்மைக்கு முரிய அறப்பயன் சிறந்ததாதலின்,அதனை 'மாண்பயன்' என்றார். வினை யென்பது பாலாற் பொருளீட்டும் வினையைக் குறித்தது.முப்பொருள்களுள் ஏனையிரண்டும் பெறுதற்குக் கருவியாயிருக்கும் பொருட் பொருளை யீட்டுதற்குத் தடையாயிருத்தலின், மனைவி விருப்பப்படியொழுகுதல் கூடாதென்பதாம். உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
|
|
கலைஞர் உரை:
|
|
பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
மனைவியின் காம் இன்பத்துக்காக அவளுடைய விருப்பத்தின்படி நடப்பவர்கள் வாழ்க்கையின் சிறந்த பயன்களை அடைய மாட்டார்கள். காரியத்தை விரும்புகிறவர்கள் விரும்பத் தகாத, நடத்தையும் அதுவேயாம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மிகுந்த பெண்ணின்பம் காரணமாக மனை வாளை விரும்பி அவள் தன்மையராக நடப்பவர்கள், தமக்குத் துணையான அறத்தினை அடையமாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அளவிறந்த காமத்தால் மனைவிக்கு அடிமையானவர் உரிய இல்லறப் பயனை எய்தார். நல்வினை ஆற்ற விழைவார்க்கு வேண்டாச் செயலாகும் அது
|
|
Translation
|
|
Who give their soul to love of wife acquire not nobler gain;
Who give their soul to strenuous deeds such meaner joys disdain.
|
|
Explanation
|
|
Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.
|
|
Transliteration
|
|
Manaivizhaivaar Maanpayan Eydhaar Vinaivizhaiyaar
Ventaap Porulum Adhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|