Thirukural

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்குஆற்றாதார் இன்னா செயல்.

ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் - மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
தேவநேயப் பாவாணர் உரை:
ஆற்றுவார்க்கு இன்னா செயல் - தாம் கருதியதை உடனே முடிக்கும் ஆற்றலுடைய பெரியார்க்கு, அஃதில்லாத சிறியார் தாம் முற்பட்டுத் தீமை செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்த அற்று- குறித்த காலத்தில் தானே தப்பாது வரக்கடவனாகிய கூற்றுவனை, அதற்கு முன்பே வலியக் கைதட்டி அழைத்தாற்போலும். கையால் விளித்தல் தொலைவிலிருப்பவரை உடனே வருவித்தற் குறிப்பினது. இவ்விரு குறளாலும் பெரியாரைப் பிழைப்பவர் தம் கேட்டைத் தாமே விரைந்து வருவித்தும் கொள்ளுதல் கூறப்பட்டது.'ஆல்' அசைநிலை.
கலைஞர் உரை:
எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
வல்லமையிற் பெரியாருக்கு வல்லமையில்லாதவர்கள் துன்பம் செய்வது, எமனைக் கையைப் பிடித்துத் தம்மிடம் இழுப்பதற்குச் சமானம்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஆற்றல் மிக்கவர்களுக்கு அவ்வாற்றல் இல்லா தார் தாம் முற்பட்டுத் துன்பத்தினைச் செய்தல், தானே வரக்கூடிய கூற்றுவனை அதற்கு முன்னதாகவே கையால் அழைத்தது போன்றதாகும்.
தமிழ்க்குழவி உரை:
ஆற்றல் மிக்கவர்க்கு ஆற்றல் இல்லாதார் தீமைசெய்தல் என்பது, கூற்றுவனை (இறப்பை) தானே கைநீட்டி அழைப்பது போன்றதாகும்
Translation
When powerless man 'gainst men of power will evil deeds essay, Tis beck'ning with the hand for Death to seize them for its prey.
Explanation
The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).
Transliteration
Kootraththaik Kaiyaal Viliththatraal Aatruvaarkku Aatraadhaar Innaa Seyal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 894