|
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் - மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஆற்றுவார்க்கு இன்னா செயல் - தாம் கருதியதை உடனே முடிக்கும் ஆற்றலுடைய பெரியார்க்கு, அஃதில்லாத சிறியார் தாம் முற்பட்டுத் தீமை செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்த அற்று- குறித்த காலத்தில் தானே தப்பாது வரக்கடவனாகிய கூற்றுவனை, அதற்கு முன்பே வலியக் கைதட்டி அழைத்தாற்போலும். கையால் விளித்தல் தொலைவிலிருப்பவரை உடனே வருவித்தற் குறிப்பினது. இவ்விரு குறளாலும் பெரியாரைப் பிழைப்பவர் தம் கேட்டைத் தாமே விரைந்து வருவித்தும் கொள்ளுதல் கூறப்பட்டது.'ஆல்' அசைநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
வல்லமையிற் பெரியாருக்கு வல்லமையில்லாதவர்கள் துன்பம் செய்வது, எமனைக் கையைப் பிடித்துத் தம்மிடம் இழுப்பதற்குச் சமானம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஆற்றல் மிக்கவர்களுக்கு அவ்வாற்றல் இல்லா தார் தாம் முற்பட்டுத் துன்பத்தினைச் செய்தல், தானே வரக்கூடிய கூற்றுவனை அதற்கு முன்னதாகவே கையால் அழைத்தது போன்றதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஆற்றல் மிக்கவர்க்கு ஆற்றல் இல்லாதார் தீமைசெய்தல் என்பது, கூற்றுவனை (இறப்பை) தானே கைநீட்டி அழைப்பது போன்றதாகும்
|
|
Translation
|
|
When powerless man 'gainst men of power will evil deeds essay,
Tis beck'ning with the hand for Death to seize them for its prey.
|
|
Explanation
|
|
The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).
|
|
Transliteration
|
|
Kootraththaik Kaiyaal Viliththatraal Aatruvaarkku
Aatraadhaar Innaa Seyal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|