|
ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வெகுளி நீங்கான் - ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன் - அதுவேயன்றித் தான் நிறையுடையன் அல்லன்; எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது - அவன்மேற்சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது. (நிறை-மறை பிறரறியாமை. வெகுள்தல் மாலையன் ஆகலானும், மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி 'இனிது' என்று பாடம் ஓதி 'அவன் பகைமை இனிது' என்று உரைப்பாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
வெகுளியின் நின்று நீங்கானாய் நிறையுடைமை இலனாயின் அவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது. இஃது இவையிரண்டு முடையவ னெல்லார்க்குந் தோற்கு மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வெகுளி நீங்கான்-சினத்தை விடாதவனாகவும்; நிறை இலன் - அடக்கமில்லாதவனாகவு மிருப்பவன்மேற் செல்லுதல்; எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது-எக்காலத்தும் எவர்க்கும் எளிதாம். ’நிறை' மறை பிறரறியாவாறு மனத்தில் நிறுத்துதல் நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை (கலித்.133). சினத் தன்மையனாகவும் மறைவெளிப்படுத்துபவனாகவு மிருத்தலால், அவன்மேற் சென்று பொருது வெல்லுதற்குக் காலமும் இடமும் வலியுமறிந்து செல்லுதல் வேண்டாதாயிற்று. "இனி, இனிதென்று பாடமோதி அவன் பகைமை இனிதென்றுரைப்பாரு முளர்." என்று பரிமேலழகர் ஒரு பாடவேறுபாடு காட்டுவர்.
|
|
கலைஞர் உரை:
|
|
சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மேலும்) எப்போதும் கோபமுள்ளவனாகவும் சொல்லிலும் செயலிலும் அளவு கடந்த பதற்ற முள்ளவனாகவும் இருப்பவன் எப்போதும் எந்த இடத்திலும் யாருக்கும் தோற்றுப்போகக்கூடிய பலவீனம் உள்ளவன்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் கோபத்தினின்று நீங்காதவனாயும், நிறைகுணம் இல்லாதவனாயும், இருப்பானானால் அவன் மேல் பகை செல்லுதல் எக் காலத்தும் எவ்விடத்தும் எளிமையாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவன் நீங்காத சினம் உடையவனாய், நெஞ்சில் நிறைவு இல்லாதவனாய் இருப்பின், எப்பொழுதாயினும் அவனை எளிதல் வென்று விடலாம்.
|
|
Translation
|
|
His wrath still blazes, every secret told; each day
This man's in every place to every foe an easy prey.
|
|
Explanation
|
|
His wrath still blazes, every secret told; each day
This man's in every place to every foe an easy prey.
|
|
Transliteration
|
|
Neengaan Vekuli Niraiyilan Egngnaandrum
Yaanganum Yaarkkum Elidhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|