Thirukural

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண். இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்-முக மலர்ந்து நல்ல விருந்தினரைப பேணுவானது இல்லத்தின்கண்; செய்யாள் அகன் அமர்ந்து உறையும்-திருமகள் மனமகிழ்ந்து வதிவாள். திருமகள் மனமகிழ்தல் செல்வம் நல்வழியிற் செலவிடப்படுதல் பற்றி. வதிதல்-நிலையாகத் தங்குதல் நல் விருந்தினர்-அறிவும் ஒழுக்கமும் தன்மானமும் உள்ளோர்.
கலைஞர் உரை:
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படிப்பட்டவனுடைய வீட்டில் எது இல்லாவிட்டாலும் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும்). முகமலர்ச்சியோடு தகுதியுடைய விருந்தினர்களை உபசரிக்கிறவனுடைய வீட்டில் மனமகிழ்ச்சியோடு திருமகள் வாசம் செய்வாள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
முகமலர்ச்சியுடன் தக்க விருந்தினரைப் போற்றுபவனுடைய இல்லத்தில் திருமகள் மனமகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பாள்.
தமிழ்க்குழவி உரை:
முகம்மலர்ந்து விருந்தினரைப் பேணி மகிழ்வார் இல்லத்தில் மனநிறைவோடு செல்வத் திருமகள் வாசம் செய்வாள்.
Translation
With smiling face he entertains each virtuous guest, 'Fortune' with gladsome mind shall in his dwelling rest.
Explanation
Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.
Transliteration
Akanamarndhu Seyyaal Uraiyum Mukanamarndhu Nalvirundhu Ompuvaan Il

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 84