Thirukural

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னாவஞ்சரை அஞ்சப் படும்.

முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை - கண்டபொழுது முகத்தால் இனியவாகச் சிரித்து எப்பொழுதும் மனத்தால் இன்னாராய வஞ்சரை; அஞ்சப்படும் - அஞ்சல் வேண்டும். (நகையது வகை பற்றி 'இனிய' என்றும், அகத்துச் செற்றம் நிகழவும் அதற்கு மறுதலையாய நகையைப் புறத்து விளைத்தலின் 'வஞ்சர்' என்றும், அச்செற்றம் குறிப்பறிதற் கருவியாய முகத்தானும் தோன்றாமையின் 'அஞ்சுதல் செய்யப்படும்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் குற்றத்திற்கு ஏதுவாய அவர் கொடுமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
முகத்தால் இனியவாக நக்கு மனத்தால் இன்னாதவாக நினைக்கும் வஞ்சகரை அஞ்சவேண்டும்.
தேவநேயப் பாவாணர் உரை:
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை - காணும் போதெல்லாம் முகத்தில் இனிதாகச் சிரித்து உள்ளத்தில் எப்போதும் தீயவராகிய வஞ்சகருக்கு; அஞ்சப்படும் - அஞ்சி விலகிக் கொள்ளல் வேண்டும். சிரிப்பின் மகிழ்ச்சி பற்றி 'இனிய' என்றும், அகத்திற் பகையிருக்கவும் புறத்தில் நட்புக்காட்டலின் 'வஞ்சர்' என்றும், பகையைக் குறிப்பாற் காட்டக் கூடிய முகமும் அதை அறிய முடியாவாறு மலர்ச்சிகொள்ளுதலின் 'அஞ்சப்படும்' என்றும், கூறினார். நகும் நேரங்களின் பன்மைபற்றி 'இனிய' என்று பன்மையிற் குறித்தார். 'நகாஅ' இசைநிறையளபெடை.
கலைஞர் உரை:
சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
மனத்தில் தீங்கு செய்வதையே நினைத்துக்கொண்டு முகத்தளவில் இனிமையாகச் சிரிக்கின்ற கபடமுள்ள பகைவர்களை அச்சமின்றி நட்பாகக் கொண்டுவிடக் கூடாது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கண்ட பொழுது முகத்தால் இனிதாகச் சிரித்து எப்போதும் மனத்தால் தீயவர்களான வஞ்சகர் களைப் பார்த்து நாம் அஞ்சுதல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
பார்க்கும் போது முகம் மலர மகிழ்ந்து பேசி, மனத்தளவில் வஞ்சகம் உடையோர்பால் நட்பு கொள்ள அஞ்சுதல் வேண்டும்.
Translation
'Tis fitting you should dread dissemblers' guile, Whose hearts are bitter while their faces smile.
Explanation
One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.
Transliteration
Mukaththin Iniya Nakaaa Akaththinnaa Vanjarai Anjap Patum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 824