|
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உறுவது சீர் தூக்கும் நட்பும் - நட்பு அளவு பாராது அதனால் வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும் பொதுமகளிரும்; கள்வரும் - பிறர்கேடு நோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும்; நேர் - தம்முள் ஒப்பர்.(நட்பு - ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின் கணிகையர் கள்வர் என்றிவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமககு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நட்டோர்க்கும் தமக்கும் வரும் நன்மை தீமைகளை யொக்கப் பார்த்துத் தமக்கு நன்மையாகுமதனைச் சீர்தூக்கும் நட்டோரும், பெற்றது கொள்ளும் கணிகையரும், கள்வருமென்று கூறப்பட்டவர் தம்முள் ஒப்பார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உறுவது சீர்தூக்கும் நட்பும் - நட்கப்படுவாரின் நலத்தையும் அருமையையும் நோக்காது அவரால் தமக்கு வரும் பயனை மட்டும் அளந்து பார்க்கும் தந்நல நண்பரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பவரை உள்ளத்திற் கொள்ளாது அவர் கொடுக்கும் பொருளை மட்டும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் விலைமகரிரும்; கள்வரும் - பிறர்கேட்டையும் அவர் படுந்துன்பத்தையும் நோக்காது தமக்குக் கிடைக்கும் பொருளை மட்டும் நோக்கிக் களவு செய்வாரும்; நேர் - தம்முள் ஒத்தவராவர். தந்நலமே கருதிப் பிறர்பொருளை வஞ்சித்துப் பெறுதலில் மூவரும் ஒத்தலின் ' நேர் ' என்றார். ' நட்பு' ஆகு பொருளி.
|
|
கலைஞர் உரை:
|
|
பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனெனில்) இலாபத்தைக் கருதி நண்பர்களைப் போல் நடிக்கிறவர்கள் பணத்தைக் கருதிக் காதலிபோல் நடிக்கிற வேசிகளுக்கும், திருடுவதற்காக யோக்கியர்களைப் போல் காணப்படுகிற கள்வருக்கும் ஒப்பாவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நட்பினைக் கருதாமல் நட்பினால் வரும் பயனைக் கருதுவோரும், கொடுப்பாரைக் கருதாமல் பணத்தின் அளவைக் காணும் பொது மகளிரும், பிறர் கேடு நோக்காமல் அவரது சோர்வினைப் பார்க்கும் கள்வரும் ஒரே தன்மையராவர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இவருடன் பழகினால் என்ன கிடைக்கும் என எதிர்பார்த்து கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு அகன்று விடும் நட்பினரும் கள்வரும் ஒப்பாவர்.
|
|
Translation
|
|
These are alike: the friends who ponder friendship's gain
Those who accept whate'er you give, and all the plundering train.
|
|
Explanation
|
|
Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character.
|
|
Transliteration
|
|
Uruvadhu Seerdhookkum Natpum Peruvadhu
Kolvaarum Kalvarum Ner
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|