Thirukural

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.)
மணக்குடவர் உரை:
இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.
தேவநேயப் பாவாணர் உரை:
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - கணவனும் மனைவிபும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு - விருந்தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே. இக் காலத்திற்போல் உண்டிச் சாலைகளும் தங்கல் விடுதிகளுமில்லாத பண்டைக் காலத்தில், பணம் பெற்றேனும், இல்லறத்தாரையன்றி விருந்தினரைப் பேண ஒருவரு மின்மையின், இல் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் விருந்தோம்பலே என்றார். ' விருந்து ' பண்பாகு பெயர்.
கலைஞர் உரை:
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
சாலமன் பாப்பையா உரை:
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
வீடுவாசலோடு இருந்து கொண்டு பொருள்களைப் பாதுகாத்து மனைவி மக்களுடன் குடும்பம் நடத்துவதன் நோக்க மெல்லாம் வீட்டுக்கு வந்தவர்களை உபசரித்து உலகத்துக்கு உபகாரமாக இருப்பதற்காகத்தான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இவ்வாழ்கையில் வாழ்ந்து பொருளினைக் காத்து வாழ்வதெல்லாம் விருந்தினரைப் போற்று உதவி செய்தற் பொருட்டேயாகும்.
தமிழ்க்குழவி உரை:
இல்லறத்திருந்து இல்வாழ்வதெல்லாம், வரும் விருந்தினர் பேணி நல்லறம் செய்வதற்காகவே என்று அமைதல் வேண்டும்.
Translation
All household cares and course of daily life have this in view. Guests to receive with courtesy, and kindly acts to do.
Explanation
The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.
Transliteration
Irundhompi Ilvaazhva Thellaam Virundhompi Velaanmai Seydhar Poruttu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 81