|
பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு - நட்டார் செய்த பிழையைத் தாமாகவே யன்றிப் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு; நட்டார் இழுக்கம் செயின் நாள் - அவர் பிழை செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம்.(பிழையாவன: சொல்லாது நற்பொருள் வௌவல், பணியாமை,அஞ்சாமை முதலாயின. கேட்டல் - உட்கோடல். 'கெழுதகைமைவல்லார்' என்பது ஒரு பெயராய், 'கேளாத' என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. செய்து போந்துழியல்லது அவ்வுரிமை வெளிப்படாமையின், செய்யாதன நாளல்லவாயின. இதனான் பிழை பொறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம். இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது. .
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு - பழைமையான நண்பர் செய்த தவற்றைத் தாமாகவன்றிப் பிறர் சொன்னாலும் பொருட்படுத்தாத நட்புரிமையறிய வல்லார்க்கு; நட்டார் இழுக்கம் செயின் நாள் - அந்நண்பர் தவறு செய்யின் அந்நாள் நன்னாளாம். 'கேள்' வகுப்பொருமை. தவறுகள் இவ்வதிகார முதற்குறளுரையிற் கூறப்பட்டன. கேட்டல் கேட்டு அதற்குத்தக்கனை செய்தல். 'கெழுதகைமை வல்லார்' ஒரு சொற்றன்மைப்பட்ட கூட்டுப்பெயர். தவறு செய்யும்நாள் நட்புரிமை வெளிப்படுத்துதலின், அறிவுடையன்பர் கண்ணோட்டம் பற்றி அதை மகிழ்ச்சி மனப்பான்மையோடு நோக்குவர் என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பழைமை நட்பை மதிக்கிறவர்கள் தம்முடைய நண்பர்களைப் பற்றி யாராவது குற்றம் சொன்னாலும் காது கொடுக்கமாட்டார்கள்.) பழகிய நண்பர்களைப் பற்றிப் பிறர் குற்றங் கூறினாலும் கேட்க விரும்பாத நட்புக் குணத்திற் சிறந்தவர்கள் தம் நண்பர்கள் தவறு செய்து விட்டால் அதைத் தம்முடைய பொல்லாத காலம் என்று பொறுத்துக்கொள்வார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நண்பர்கள் செய்த பிழையினைத் தாமே யல்லாமல் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமையறிய. வல்லவர்களுக்கு அந்த நண்பர்கள் பிழை செய்த நாள் பயன் பட்ட நாளாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நண்பர் ஒருவரின் குறைகளைப் பிறர் பெரிது படுத்திக் கூறினும், நட்பின் உரிமையால் மகிழ்பவர்கள், அதனை அந்நாளின் குறைபாடாகவே கருதுவர்.
|
|
Translation
|
|
In strength of friendship rare of friend's disgrace who will not hear,
The day his friend offends will day of grace to him appear.
|
|
Explanation
|
|
To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault.
|
|
Transliteration
|
|
Kelizhukkam Kelaak Kezhudhakaimai Vallaarkku
Naalizhukkam Nattaar Seyin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|