Thirukural

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல்.

ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒருவற்கு ஊதியம் என்பது - ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஒரீஇ விடல் - அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து அவரின் நீங்குதல். (நட்பு ஒழிந்தாலும் நீங்காக்கால் 'வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வே' மாறு போலத் (நாலடி.180) தீங்குவருதலின் 'விடல்' என்றும் நீங்கியவழித் தீங்கொழிதலேயன்றி இருமை இன்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின், அதனை 'ஊதியம்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு இலாபமென்று சொல்லப்படுவது அறிவில்லாதாரோடு நட்பாகுதலை நீங்கி விடுதல். இது பேதையார் நட்பைத் தவிர்கவென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒருவற்கு ஊதியம் என்பது-ஒருவனுக்கு வரவுப்பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஒரீஇவிடல்- அறிவிலாதாரோடு தெரியாமற் செய்துகொண்ட நட்பைவிட்டுவிட்டு, அவரிடத்தினின்று நீங்கிக்கொள்ளுதலாம். அறிவிலாதார் தொடர்பு தீங்கே விளைத்தலால் ஒரிஇ என்றும்; அவர் தொடர்பை விட்டவிடத்தும் அருகிலிருந்தால், மூங்கிலைச் சார்ந்த சந்தனமரமும் வேதல்போலப் பின்னுந் தீங்குவருதலால் 'விடல்' என்றும்; அவரைவிட்டு நீங்கியபின் தீங்கொழிதலோடு இருமை யின்பத்திற்கும் வழியேற்படுதலால் அதனைப் 'பேறு' என்றும்; கூறினார். 'ஒரீஇ' இன்னிசை யளபெடை
கலைஞர் உரை:
ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படி அளந்து பார்த்து அதில் தேறாமல் துன்பக் காலத்தில் உதவாத ) மூடர்களுடைய உறவை நீக்கிவிடுவது ஒருவனுக்கு இலாபமுள்ள காரியம் எனப்படும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவனுக்கு ஊதியம் என்பது யாதென்றால். அறிவில்லாதவருடன் கொண்ட நட்பினை ஒழித்து நீங்கி விடுவதாகும்.
தமிழ்க்குழவி உரை:
அறிவிலா பேதையரின் நட்பை விட்டுவிடுவதென்பது ஒருவருக்கு கிடைத்த ஊதியம் போன்றதாகும்.
Translation
'Tis gain to any man, the sages say, Friendship of fools to put away.
Explanation
It is indead a gain for one to renounce the friendship of fools.
Transliteration
Oodhiyam Enpadhu Oruvarkup Pedhaiyaar Kenmai Oreei Vital

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 797