|
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து - ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க -அவனோடு நட்புச் செய்க. (குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இனனும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பார் 'அறிந்து யாக்க' என்றும் கூறினார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க. இவையெல்லாம் ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லு மென்றவாறாம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து- ஒருவனுடைய குணத்தையும் குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறைவற்ற சுற்றத்தையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க-நல்லதென்று காணின் அவனொடு நட்புச்செய்க. குணம் என்றது நற்குணத்தை. குடியென்றது சேக்கிழார் குடிபோலும் குடும்பப் பிறப்பை. குற்றம் என்றது தீக்குணத்தை "குணநாடிக் குற்றமும் நாடி யவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்." (குறள். 504) என்றமையால், குற்றம் பொறுக்கத்தக்க சிற்றளவாயின் பொருட்படுத்தக்கூடாதென்பது கருத்து. சுற்றத் தொடர்புகொண்டவன் நட்புத் தொடர்பிற்கும் ஏற்றவனாயிருப்பனாதலின், இன முடைமையும் வேண்டப்பட்டது. "ஒருமரமுந் தோப்பன்று, ஒரு மகவும் மகவன்று." என்னும் நெறிமுறை பற்றிக் 'குன்றா வினனும்' என்றார். இதனால் ஆராயும்வகை கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆராய்ந்து நட்புக் கொள்வதென்றால், ஒருவனை நண்பனாக நம்பி விடுவதற்கு முன்னால் அவனுடைய) நல்ல குணத்தையும், அவன் பிறந்த குடும்பத்தின் தன்மையையும், அவனுக்குள்ள குற்றங்களையும், அவன் எப்போதும் பழகி வருகிற சகவாசங்களையும் ஆராய்ந்து அறிந்து கொண்ட பிறகே நட்பாகக் கொள்ளவேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனுடைய குணத்தினையும், குடிப்பிறப் பினையும், குற்றத்தினையும், குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து அவனோடு நட்புச் செய்தல் வேண்டும்
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவருடைய குணநலன், குடிப்பெருமை, குற்றப்பின்னணி, கொண்டுள்ள கூட்டத்தின் தன்மை இவற்றை அறிந்து நட்புக் கொள்ள வேண்டும்.
|
|
Translation
|
|
Temper, descent, defects, associations free
From blame: know these, then let the man be friend to thee.
|
|
Explanation
|
|
Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations.
|
|
Transliteration
|
|
Kunamum Kutimaiyum Kutramum Kundraa
Inanum Arindhiyaakka Natpu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|