|
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நட்டல் நகுதற்பொருட்டன்று - ஒருவனோடு, ஒருவன் நட்புச் செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு - அவர்க்கு வேண்டாத செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. (பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான் வேண்டப்படுவதன்மையின் அதனை 'மிகுதி' என்றும், அது செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின், 'மேற்சென்று' என்றும், இன்சொற்கு மீளாமையின், 'இடித்தற்பொருட்டு' என்றும் கூறினார். இதனான் நட்பின் பயன் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவனோடு ஒருவன் நட்புப் பண்ணுதல் நகுதற்பொருட்டன்று; மிகையாயின செய்யுமிடத்து முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. இது மனமகிழ நட்புக்கோடலன்றித் தீக்கருமங்கண்டால் கழறவும்வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நட்டல் நகுதல் பொருட்டு அன்று-ஒருவரோடொருவர் நட்புச்செய்வது தாம் கூடிப்பேசிச் சிரித்து மகிழ்வதற்கன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற்பொருட்டு-இருவருள் ஒருவர் தம் அறிவுக்குறைவால் ஏதேனும் வரம்பிறந்த செயல் செய்வராயின், அவரை அறிவுநிறைந்த இன்னெருவர் முற்பட்டுக் கடிந்து திருத்தற்பொருட்டே. ஒழுக்க வரம்பிற்கு மிஞ்சியதை 'மிகுதி' யென்றும், அதனாற் கெடுமுன் அல்லது தண்டனையடையுமுன் திருத்தவேண்டுதலின் 'மேற்சென்று' என்றும், இன்சொற்கு வயப்படாமையின் 'இடித்தற் பொருட்டு' என்றும், கூறினார். இதனால் நட்பின் நோக்கங் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
ஒருவரோடொருவர் நட்புக் கொள்வது இன்பமானவற்றைப் பேசிச் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமல்ல; ஒருவர் ஒரு குற்றம் செய்தால் மற்றவர் அதை எடுத்துக் காட்டி இடித்துத் திருத்துவதற்கேயாம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவரோடு ஒருவர் நட்புச் செய்து கொள்ளு தல் தம்முள் நகைத்துப் பழுகுவதற்காக அல்ல; நண்பனிடம் வேண்டாத செய்கை உண்டாகும்போது முற்பட்டுக் கண்டித்து அவர்க்குப் புத்திமதி சொல்லுதற்கேயாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சிரித்துப் பழகுவதற்காக மட்டுமன்று நட்பு, சிறுமை கண்ட விடத்துக் கடிந்து திருத்துவதற்கும் நட்பிற்குரிமை உண்டு.
|
|
Translation
|
|
Nor for laughter only friendship all the pleasant day,
But for strokes of sharp reproving, when from right you stray.
|
|
Explanation
|
|
Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.
|
|
Transliteration
|
|
Nakudhar Poruttandru Nattal Mikudhikkan
Mersenaru Itiththar Poruttu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|