|
பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பகையகத்துச் சாவார் எளியர் - பகையிடை அஞ்சாது புக்குச் சாவவல்லார் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதாவர் அரியர் - அவையிடை அஞ்சாது புக்குச் சொல்ல வல்லார் சிலர். ('அஞ்சாமை', 'சாவார்' என்பதனோடும் கூட்டி, அதனால் 'சொல்ல வல்லார்' என்பது வருவித்து உரைக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் அவை அஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பகையின்கண் அஞ்சாது நின்று சாவார் பெறுதற்கு எளியர்; அவையின்கண் அஞ்சாது சொல்லவல்லவர் அறிதற்கு அரியர். இஃது அவையஞ்சாமை அரிதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பகையகத்துச் சாவார் எளியர்-போர்க்களத்துள் அஞ்சாது புகுந்து பகைவரொடு பொருது மறத்தொடு சாகவல்லவர் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதவர் அரியர்-ஆயின், ஓர் அவையிடத்துப் புகுந்து அஞ்சாது நின்று உரை நிகழ்த்த வவ்லவர் சிலரே. இது பகையஞ்சார்க்கும் அவையஞ்சார்க்குமுள்ள தொகைவேற்றுமை கூறிற்று. அமர்க்கள மறத்தினும் அவைக்கள மறமே சிறந்த தென்பது கருத்து. ஒப்புமை கூறும் உவமையிற் போன்றே ஒவ்வாமை கூறும் வேற்றுமையிலும் உள்ள இரு கூறுகளுள், ஒன்றன் அடை இன்றொன்றைச் சாருமாதலின், அஞ்சாமை 'சாவார்' என்பதனொடு கூட்டப்பட்டது. பொருட்கேற்பப் பொருதல் சொல்லுதல் என்னும் இரு சாரார் வினைகளும் வருவித்துரைக்கப்பட்டன. எளிமையும் அருமையும் பெரும்பான்மை சிறுபான்மையொடு தாழ்வுயர்வும் உணர்த்தி நின்றன. இம் முக்குறளாலும் அவையஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(சபைக் கூச்சமில்லாமல் பேசத் தெரிந்தவர்கள் வெகு சிலரே.) போர்க்களத்தில் பகைவர்களுக்கு அஞ்சாமல் உயிர் விடக்கூடியவர்கள் பல பேர் உண்டு. ஆனால் சபையில் அச்சமில்லாமல் பேசச்கூடியவர்கள் வெகு சிலரே.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பகையினை எதிர்த்து அஞ்சாமல் சென்று இறப்பவர்கள் உலகத்தில் பல பேருண்டு; ஆனால், சபைக்கு அஞ்சாமல் சென்று சொல்ல வல்லவர்கள் சிலரேயாவர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
போர்களத்தில் அஞ்சாமல் போரிட்டு உயிரைத் துறப்பவர்கள் கூட எளியோரே. ஆனால் கற்றோர் அவையில் அஞ்சாமல் பேசத்துணிபவர்கள் அரிதானவர்கள்.
|
|
Translation
|
|
Many encountering death in face of foe will hold their ground;
Who speak undaunted in the council hall are rarely found.
|
|
Explanation
|
|
Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).
|
|
Transliteration
|
|
Pakaiyakaththuch Chaavaar Eliyar Ariyar
Avaiyakaththu Anjaa Thavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|