Thirukural

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்நன்குசலச் சொல்லு வார்.

நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்குரியார்; புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அவையறியாத புல்லர் இருந்த அவைக்கண் அவற்றை மறந்தும் சொல்லாதொழிக. (சொல்லின், தம் அவையறியாமையை நோக்கி நல்லவையும், பொருளறியாமையால் புல்லவைதானும் இகழ்தலின், இரண்டு அவைக்கும் ஆகார் என்பது கருதிப் 'பொச்சாந்தும் சொல்லற்க' என்றார்.)
மணக்குடவர் உரை:
புல்லியவரிருந்த அவையின்கண் மறந்துஞ் சொல்லா தொழிக: நல்லவரிருந்த அவையின்கண் நல்லதனை இசையச் சொல்லவல்லார்.
தேவநேயப் பாவாணர் உரை:
நல் அவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்ல அறிஞரவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்ல வல்லார்; புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அறிஞரில்லாச் சிறியோ ரவைக்கண் அவற்றை மறந்துஞ் சொல்லாதிருக்க. சொல்லின், பன்றிக்குமுன் முத்தைப் போடுதலென்று நல்லவையும், பொருள் விளங்காமையிற் புல்லவையும் பழித்தலால் , இருசாரார்க்கும் ஆகாமை கருதிப் 'பொச்சாந்துஞ் சொல்லற்க' என்றார்.
கலைஞர் உரை:
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.
சாலமன் பாப்பையா உரை:
நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனால் கல்வி யறிவும் உணருந்தன்மையும் உள்ளவர்கள் நிறைந்த) நல்ல சபையோர் மெச்சும்படி கல்வி யறிவோடு பேசத் தெரிந்தவர்கள், கல்வியும் உணர்ச்சியும் குறைவான கூட்டங்களில் அந்தக் கல்வித் திறமுள்ள பேச்சை மறந்தும் பேசி விடக்கூடாது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நல்லார் இருந்த அவையில் நல்ல பொருட் களை அவர் மனங்கொள்ளுமாறு சொல்லுதற்குரியவர், புல்லர்கள் இருந்த அவையில் அவற்றை மறந்தும் சொல்லா திருத்தல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
நல்ல அறிஞர்கள் இருக்கும் அவையில் நன்கு பேசுவோர் புல்லறிவாளர்கள் மத்தியில் மறந்தும் பேசக் கூடாது.
Translation
In councils of the good, who speak good things with penetrating power, In councils of the mean, let them say nought, e'en in oblivious hour.
Explanation
Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low.
Transliteration
Pullavaiyul Pochchaandhum Sollarka Nallavaiyul Nankusalach Chollu Vaar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 719