Thirukural

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கங் கடிந்து செயல்.

மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க. (கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின்,தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை - திட்பம் உடைமை.)
மணக்குடவர் உரை:
கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க. இது விரைந்து செய்யவேண்டு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கலங்காது கண்ட வினைக்கண்-தெளிவாக எண்ணித்துணிந்த வினை முயற்சியில்; துளங்காது தூக்கம் கடிந்து செயல்-பின்பு மன அசைவில்லாதும் காலந்தாழ்க்காதும் விரைந்து ஊக்கமாகச் செய்க. தப்பாது பயன் படுமென்றும் வெற்றியாக முடியுமென்றும் தெளிவாக ஆராய்ந்தறிந்த வினையைக் 'கலங்காது கண்ட வினை' யென்றும், மனத்தளர்ச்சியும் உடற்சோம்பலும் வினையைக் கெடுக்கு மாதலின் 'துளங்காது தூக்கங் கடிந்து செயல்' என்றும், கூறினார்.
கலைஞர் உரை:
மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அவர்களைப் பின்பற்றி) நல்ல காரியம் என்று தெளிவாகத் தெரிந்து மேற்கொண்டுவிட்ட காரியத்தைப் பூர்த்தி செய்யும் மன உறுதியுடன் ஓய்வின்றி உழைக்க வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மனம் தெளிந்து செய்வதற்குத் துணிந்த. தொழிலினிடத்து அசைதலின்றி நீட்டித்துவிடாமல் செய்தல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
கலங்காமல் தெளிந்து ஒரு பணியைத் தெரிவு செய்த பிறகு சோர்வுறாமல் காலம் தாழ்த்துவதைத் தவிர்த்து உடனடியாகச் செய்து முடிக்க வேண்டும்.
Translation
What clearly eye discerns as right, with steadfast will, And mind unslumbering, that should man fulfil.
Explanation
An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.
Transliteration
Kalangaadhu Kanta Vinaikkan Thulangaadhu Thookkang Katindhu Seyal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 668