Thirukural

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்எழுபது கோடி உறும்.

தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பக்கத்துள் பழுது எண்ணும் மந்திரியின் - பக்கத்திருந்து பிழைப்ப எண்ணும் அமைச்சன் ஒருவனில்; ஓரெழுபதுகோடி தெவ்உறும் - அரசனுக்கு எதிர் நிற்பார் ஓரெழுபதுகோடி பகைவர் உறுவர். (எழுபது கோடி என்றது மிகப் பலவாய எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு. வெளிப்பட நிற்றலான் அவர் காக்கப்படுவர்; இவன் உட்பகையாய் நிற்றலான் காக்கப்படான் என்பதுபற்றி இவ்வாறு கூறினார். 'எழுபது கோடி மடங்கு நல்லர்' என்று உரைப்பாரும், 'எழுபது கூறுதலை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
குற்றப்பட எண்ணும் அமைச்சரில் எழுபது கோடி மடங்கு நல்லர், உட்பகையாய்த் தன் னருகிலிருப்பவர். இவை யிரண்டும் மந்திரிகளுள் விடப்படுவாரது இலக்கணங் கூறின
தேவநேயப் பாவாணர் உரை:
பழுது எண்ணும் மந்திரியில் - நன்மை செய்கிறவன்போல் அருகிலிருந்து கொண்டு தீமையை எண்ணும் அமைச்சன் ஒருவனில்; பக்கத்துள் ஓர் எழுபது கோடி தெவ் உறும் - அரசனுக்குப் பக்கமாகவே எழுபது கோடிப் பகைவர் அமைவர். புறப்பகைவர் பலராயினும் அவருக்குத் தப்பமுடியும். அகப்பகைவராயின், அவருள்ளும் சூழ்ச்சித்துணையாயிருக்கும் அமைச்சனே வீழ்ச்சித்துணையாயிருப்பின், ஒருவனே யாயினும் தப்ப முடியாதாம். ஆதலால் 'பக்கத்துள்தெவ் எழுபது கோடியுறும்' என்றார். ஏழு என்பது நிறைவான எண்ணும் கோடி என்பது பேரெண்ணுமாதலால், எழுபது கோடி யென்றது உண்மையில் அதனினும் மிகப் பெரிய தொகையையே. அதனால் அழிவிற்குத் தப்ப முடியாது என்னும் உண்மையைக் குறித்தார். அமைச்சன் என்றும் அரசனுக்குப் பக்கமாகவே யிருப்பவனாதலாலும், பழுதெண்ணும் மந்திரியால் வருங்கேட்டிற்குத் தப்பமுடியா தென்பதையே ஆசிரியர் வலியுறுத்த விரும்புவதாலும் , 'பக்கத்துள்தெவ்' என்றே குறளிற் சொற்றொடர் நிற்றலாலும், 'பக்கத்துள்' என்னுஞ் சொல் 'தெவ்' என்பதையே தழுவுவதாம். பகைவர் மாபெருந் தொகையராயினும், சேய்மையில் நிற்பவரினும் அண்மையில் நிற்பவரால் அழிவு உறுதியாதலை எண்ணிக் காண்க. இதனால், அரசன் விழிப்பாயிருந்து ஒற்றர் வாயிலாக உண்மை யறிந்து, ஐயுறவிற்கிடமான அமைச்சனை உடனே விலக்கவேண்டு மென்பது கூறப்பட்டது. 'எழுபது கோடியுறும்' என்பதற்கு எழுபது கோடிமடங்கு நல்ல ரென்றுரைப்பது பொருந்தாது. இனி, "எழுபது கோடி தலை" என்றும் எழுபது கூறு தலை என்றும், பண்டை யுரையாசிரியன்மார் கொண்ட பாடமும் பொருந்துவன வாகா.
கலைஞர் உரை:
தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(தவறான ஆலோசனை சொல்லிவிடக்கூடிய மந்திரிகள் இருக்கக்கூடாது.) தப்பான ஆலோசனை சொல்லிவிடக்கூடிய மந்திரி அரசனுக்குப் பக்கத்தில் இருப்பது எழுபதுகோடி பகைவர்கள் சூழ்ந்து கொண்டதற்குச் சமானம்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பக்கத்திலிருந்து கொண்டே தவறானவற்றை எண்ணுகின்ற அமைச்சன் ஒருவன், அரசனுக்கு எதிராக. நிற்கும் ஓர் எழுபது கோடி பகைவர்களை விடவும் கொடியவனாவான்.
தமிழ்க்குழவி உரை:
அரசனுக்கு அருகில் இருந்து கெடுதல் எண்ணும் ஒரு அமைச்சரை விட எழுபதுகோடி பகைவர்கள்மேல்.
Translation
A minister who by king's side plots evil things Worse woes than countless foemen brings.
Explanation
Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin.
Transliteration
Pazhudhennum Mandhiriyin Pakkadhadhul Thevvor Ezhupadhu Koti Urum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 639