Thirukural

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்பம் உறுதல் இலன்.

இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் - தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன் - தன் முயற்சியால் துன்பமுறான். (இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின்,இவ்விரண்டுஞ் செய்யாதானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.)
மணக்குடவர் உரை:
இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாகக் கொள்ளுமவன் துன்ப முறுதல் இல்லை. இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல்வேண்டு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
இன்பம் விழையான் - இன்பத்தைச் சிறப்பாக விரும்பாது; இடும்பை இயல்பு என்பான் - இவ்வுலக வாழ்விலும் வினை முயற்சியிலும் துன்பம் நேர்வது இயல்பென்று தெளிந்திருப்பவன்; துன்பம் உறுதல் இலன் - துன்பம் வந்தவிடத்துத் துன்பமுறுத லில்லை. இன்பத்தைச் சிறப்பாக விரும்பாமையால் இன்பம் இல்லாவிடத்தும், ஆள்வினைஞன் துன்பமுறுதல் இல்லை யென்றார்.
கலைஞர் உரை:
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படி) இன்பங்களில் ஆசை கொள்ளாமல் துன்பம் வருவது இயற்கைதான் என்று எண்ணுகிறவன் துன்பத்தால் பாதிக்கப்படமாட்டான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தனக்கு இன்பமானவற்றை விரும்பாமல், துன்பம் வந்தால் இயற்கையென்று உணர்ந்திருப்பவன் தனது முயற்சியால் துன்பம் அடையமாட்டான்.
தமிழ்க்குழவி உரை:
இன்பம் ஒன்றையே விரும்பாதவன் இடர்ப்பாடுகள் உலகஇயல்பு தான் என்று அறிந்து கொள்பவன்.வாழ்க்கையில் துன்பப்படுவது இல்லை.
Translation
He seeks not joy, to sorrow man is born, he knows; Such man will walk unharmed by touch of human woes.
Explanation
That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).
Transliteration
Inpam Vizhaiyaan Itumpai Iyalpenpaan Thunpam Urudhal Ilan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 628