|
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் - அவன் தன்னினும் முந்துற அழியும். (அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் 'பேதை' என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும்' என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி தனக்கு முன்பே கெடும்.
சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி -அழிக்கும் இயல்புள்ள சோம்பலைத் தன்னிடங்கொண்டொழுகும் அறிவிலி பிறந்தகுடி; தன்னினும் முந்து மடியும் -அவனினும் முற்பட அழிந்து போம்.
அழிவு தருவதை உடன்கொண்டொழுகலாற் ' பேதை ' என்றும் ,அவனாற் காக்கப்படாமையால் அவனினும் முந்துற வழியும் என்றும் ,கூறினார். முந்துற வழிதலாவது அவனொடு தொடர்பின்றி மறைதல்.
|
|
கலைஞர் உரை:
|
|
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன்
அழிந்து போய் விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனெனில்) சோம்பேறித்தனம் மிகுந்துள்ள மூடன் பிறந்த குடித்தனம். அவனால் அவன் மடிவதற்கு முன்னால் குடி முழுகிப் போய் விடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
விடவேண்டிய சோம்பலினைத் தன்னுள்ளே வைத்து நடக்கின்ற அறிவில்லாதவன் பிறந்துள்ள குடியானது, அவனுடைய காலம் முடிவதற்குள் அழிந்துவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மடியை (சோம்பலை)த் தன் மடிமீது வைத்துக் கொண்டு ஒழுகும் அறிவில்லா ஒருவன் பிறந்த குடும்ப மானது அவனுக்கு முன்னதாகவே மடிந்து (அழிந்து) விடும்.
|
|
Translation
|
|
Who fosters indolence within his breast, the silly elf!
The house from which he springs shall perish ere himself.
|
|
Explanation
|
|
The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.
|
|
Transliteration
|
|
Matimatik Kontozhukum Pedhai Pirandha
Kutimatiyum Thanninum Mundhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|