Thirukural

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு.

ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உள்ளம் இல்லாதவர் - ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் - இவ்வுலகத்தாருள் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார். (ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கு எய்தார்' என்றார். கொடை, வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
உள்ளமிகுதியில்லாதார் உலகின்கண் வண்மையுடைமை யென்னுங் களிப்பினைப் பெறார். இஃது உள்ளமிகுதி யில்லாதார்க்குப் பொருள்வரவு இல்லையாம் ஆதலான் அவர் பிறர்க்கு ஈயமாட்டாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
உள்ளம் இலாதவர்-ஊக்கமில்லாத அரசரும் பெருஞ்செல்வரும்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் -இவ்வுலகத்தில் யாமே வண்மையுடையேம் என்று மகிழ்வொடு கருதும் பெருமிதம் பெறார். ஊக்கமில்லாதவர்க்கு அதனாலுண்டாகும் முயற்சியும், முயற்சியாலுண்டாகும் பொருளும் ,பொருளாலுண்டாகும் கொடையும் , கொடையாலுண்டாகும் செருக்கும் இல்லையாதலின் , வள்ளிய தீயதுமான இருவகைச் செருக்குள் ,இங்குக் குறித்தது நல்லது என அறிக. "கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே". என்பது தொல்காப்பியம் (மெய்ப்பாட்டியல், 6).
கலைஞர் உரை:
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படிப்பட்ட ஊக்கமில்லாதவர்கள் சிறப்புக்களை உடையவர்கள் என்ற பெருமை அடைய முடியாது.) ஊக்கம் இல்லாதவர்கள் நல்லவர்கள் என்ற புகழையும் அதனால் வரும் இன்பங்களையும் அடைய முடியாது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஊக்கம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தாருள் யாம் வண்மையுடையேம் என்று தம்மைத் தாமே மதிக்கும் பெருமையினைப் பெறமாட்டார்கள்.
தமிழ்க்குழவி உரை:
முயற்சியும் உள்ள உறுதியும் இல்லாதவர்கள் உலகத்தில் வள்ளண்மையுடையோம் என்னும் பெருமை பெற்று வாழ்தல் இயலாது.
Translation
The soulless man can never gain Th' ennobling sense of power with men.
Explanation
Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality".
Transliteration
Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu Valliyam Ennunj Cherukku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 598