Thirukural

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை.

(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே - அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை - அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி. (அழுத கண்ணீர்: அழுதலான் வந்த கண்ணீர் - 'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு அதற்கு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் ஆயுதம். இஃது இவ்வரசன் கெடுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அல்லல் பட்டு ஆற்றது அழுத கண்ணீர் அன்றே - குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப்பொறுக்க முடியாது அழுத கண்ணீரன்றோ ; செல்வத்தை தேய்க்கும் படை - அவ்வரசனின் ஆட்சிச் செல்வத்தை அழிக்கும் படைக்கலம். கொடுங்கோலரசன் கொடுமையைக் குடிகளின் ஆற்றொணாத் துயரநெஞ்சே போக்கிவிடும் . அதற்கு வேற்றரசன் வினைவேண்டியதில்லை யென்பது கருத்து . செல்வத்தை யழிப்பது துயரநெஞ் சேயாயினும், அதை வெளிப்படையாகத் தெரிவிப்பது கண்ணீராதலால் , அழிப்புவினை கண்ணீரின்மே லேற்றப்பட்டது . செல்வத்தை மரமாக உருவகியாமையின் இது ஒருமருங் குருவகம் . ஏகாரம் வினா . எளியோரை வலியோர் வாட்டினால் வலியோரைத் தெய்வம் வாட்டும் . ஆதலால், கொடுங்கோலரசனை இறைவனே அழித்து விடுவான் என்பது கருத்து.
கலைஞர் உரை:
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(எப்படி யென்றால்) கொடுங்கோல் ஆட்சியினால் துன்ப மடைந்து பொறுக்க முடியாமல் குடிமக்கள் அழுது வடிக்கின்ற கண்ணீரே அந்த ஆட்சியின் செல்வத்தை அழித்துவிடக்கூடிய ஆயுதமாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
குடிமக்கள் அரசனால் துன்பப்பட்டு அதனைப் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீரல்லவா, அவனுடைய செல்வத்தினைக் குறைக்கும் கருவியாகும்.
தமிழ்க்குழவி உரை:
அல்லற்பட்டு மக்கள் ஆற்றாமையால் அழுகின்ற கண்ணீரே, அறம் பிறழ்ந்த அரசின் செல்வமெலாம் அழித்தொழிக்கும் படையாகும்.
Translation
His people's tears of sorrow past endurance, are not they Sharp instruments to wear the monarch's wealth away?.
Explanation
Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?.
Transliteration
Allarpattu Aatraadhu Azhudhakan Neerandre Selvaththaith Theykkum Patai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 555