|
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தான் உள்ளியது எய்தல் எளிது மன் - அரசனுக்குத் தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம், மற்றும் உள்ளியது உள்ளப் பெறின் - பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின். (அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது: மறவி இன்றி அதன்கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது; பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின்.
இனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மன் தான் உள்ளியது எய்தல் எளிது - அரசன் தான் கருதிய பொருளைத் தான் கருதியவாறே பெறுதல் எளிதாம் ; உள்ளியது மற்றும் உள்ளப் பெறின் - தான் எண்ணியதைப் பின்னும் விடாது எண்ணக் கூடுமாயின்.
உள்ளியதை யுள்ளுதலாவது தான் கருதியதைப் பெறும் வரை மறவாது அது பற்றி முயற்சி செய்தல் . 'மற்று' பின்மைப் பொருளில் வந்தது . 'மன்' என்பதை இடைச் சொல்லாகக் கொண்டு , அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின் , 'மன்' ஒழியிசைக் கண் வந்தது ,என்னும் பரிமேலழகர் இலக்கணக் குறிப்பு இவ்விடத்திற்கு ஏற்காமை யுணர்க.
|
|
கலைஞர் உரை:
|
|
கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி
காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது
எளிதானதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆகையினால்) நினைவிலிருக்க வேண்டிய நல்ல காரியங்களை மறந்துவிடாமல் சிந்தனை செய்து கொண்டேயிருந்தால் நினைத்ததை நினைத்தபடி முடிக்கலாம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தான் அடைய நினைத்த பொருள்கள் அனைத்தையும் ஒருவன் அடைதல் எளிதாக முடியும். எப்போது என்றால், பின்னும் தான் அதனையே நினைத்திருப்பானேயானால், என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவன் தான் எய்த எண்ணியதை இடைவிடாது எண்ணி எண்ணி முயன்றால் எண்ணியதை எளிதாகவே அடைந்து விட முடியும்.
|
|
Translation
|
|
'Tis easy what thou hast in mind to gain,
If what thou hast in mind thy mind retain.
|
|
Explanation
|
|
It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it.
|
|
Transliteration
|
|
Ulliyadhu Eydhal Elidhuman Matrundhaan
Ulliyadhu Ullap Perin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|