|
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம்
தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
யாரையும் தேராது தேறற்க - யாவரையும் ஆராயாது தெளியா தொழிக, தேர்ந்த பின்தேறும் பொருள் தேறுக - ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக. ('தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டு , 'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை. 'பொருள்' ஆகுபெயர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
யாவரையும் ஆராயாது தெளியாதொழிக; ஆராய்ந்த பின்பு அவராற் றேறப்படும் பொருளைத் தேறுக.
இஃது ஒருபொருளிற் றேற்றமுடையாரை எல்லாப் பொருளினும் தெளிக வென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
யாரையும் தேராது தேறற்க - எத்துணைச் சிறந்தவரையும் எவ்வினைக்கும் ஆராயாது தெளியற்க ; தேர்ந்தபின் தேறும் பொருள்தேறுக - ஆராய்ந்து ஒருவரைத் தெளிந்தபின் அவரைநம்பி அவரிடம் ஒப்படைக்கக்கூடிய வினைகளைப்பற்றி ஐயுறற்க.
உம்மை சிறப்பின்பாற் பட்டது . வினைவகையில் , 'தேறற்க' என்றது பொதுத்தேர்வும் தேறுக என்றது சிறப்புத்தேர்வும் பற்றியனவாகும். 'பொருள்' ஆகுபொருளது.
|
|
கலைஞர் உரை:
|
|
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க
வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக் கூடாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(நம்பத் தகுந்தவர்கள் என்று தெரிந்தவர்களிலும் எல்லாரும் எல்லாக் காரியத்துக்கும் தகுதியுள்ளவர்களாக இருக்க முடியாது. அதனால்) ஆராய்ந்தறியாமல் யாரையும் நம்பிவிடக் கூடாது. ஆராய்ந்தறிந்து நம்பத் தகுந்தவன் என்று தெரிந்த பின், அவன் எந்தக் காரியத்துக்கு ஏவத் தகுந்தவன் என்பதையும் ஆராய்ந்து ஒப்படைக்க வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
யாரையும் ஆராய்ந்து பாராமல் தெளிய வேண்டா, ஆராய்ந்த] பின் தெளியப்படும் பொருள்களை ஐயுறாமல் (சந்தேகிக்காமல்) தெளிதல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
யாரையும் உரிய ஆய்வின்றி தேர்வு செய்யக் கூடாது. தேர்வு செய்த பின் அவருக்கேற்ற பணியையே அவருக்கு வழங்கல் வேண்டும்.
|
|
Translation
|
|
Trust no man whom you have not fully tried,
When tested, in his prudence proved confide.
|
|
Explanation
|
|
Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.
|
|
Transliteration
|
|
Therarka Yaaraiyum Theraadhu Therndhapin
Theruka Therum Porul
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|