|
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து,
மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
குணம் நாடி - குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து, குற்றமும் நாடி - ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகை நாடி - பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து, மிக்க கொளல் - அவனை அம்மிக்கவற்றானே அறிக. (மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவையாவன: தலைமையானாகப் பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமேயுடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத்தையும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கதனை யறிந்து அவற்றுள்ளும் தலைமையாயினும் பன்மையாயினும் மிக்கதனைக் கொள்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
குணம் நாடி - குணமுங் குற்றமு மாகிய இரண்டு முடையாரே உலகத்திலிருத்தலால் , ஒருவன் குணங்களை முதலில் ஆராய்ந்து ; குற்றமும் நாடி - அதன்பின் அவன் குற்றங்களையும் ஆராய்ந்து ; அவற்றுள் மிகை நாடி - அவ்விரு பகுதிகளுள்ளும் அளவில் மிகுந்ததை ஆராய்ந்து ; மிக்க கொளல் - மிகுந்ததை அளவையாகக் கொண்டு அவன் தகுதியுண்மை யின்மையைத் துணிக.
ஒருவனுடைய குற்றங்கள் ஒன்றிற்கு மேற்பட்டனவாகவும் விளங்கித் தோன்றுவனவாகவு மிருந்து , அவனை எங்ஙனந் தெளிவதென்று மயக்கம் நேரின் , அம்மயக்கத்தைத் தெளிவிப்பது இக்குறள் . குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து , குணம் மிகின் வினைக் குரியவனென்றும் , குற்றம் மிகின் அல்லனென்றும் , தீர்மானிக்க என்றார், மிகையுடையது மிகையெனப்பட்டது . மிகை பன்மை பற்றி அல்லது தலைமை பற்றித் தீர்மானிக்கப்படுவது.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து
அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு
அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(குற்றமே இல்லாதவர்களாகப் பார்த்துத்தான் நம்ப வேண்டுமென்பது முடியாத காரியம். யாரிடத்திலும் குற்றமும் உண்டு. குணமும் உண்டு. அதனால்) ஒருவனுடைய நல்ல குணத்தையும் ஆராய்ந்து அவனுடைய கெட்ட குணத்தையும் ஆராய்ந்து எது அதிகமோ அதைக்கொண்டு தீர்மானிக்கவேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனுடைய குணங்களையும் ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்ந்து அந்த இரண்டு வகைகளிலும் மிக்கவற்றை ஆராய்ந்து, அந்த மிக்கவற்றைக் கொண்டு அவனை அறிந்து கொள்ளல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவருடைய குணநலன்களை ஆய்ந்து, அவர்தம் குற்றங்களையும் தெரிந்து, அவற்றுள் மிகையானவை எவை எனத் தேர்ந்து மதிப்பிடல் வேண்டும்.
|
|
Translation
|
|
Weigh well the good of each, his failings closely scan,
As these or those prevail, so estimate the man.
|
|
Explanation
|
|
Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.
|
|
Transliteration
|
|
Kunamnaatik Kutramum Naati Avatrul
Mikainaati Mikka Kolal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|