Thirukural

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சிறை நலனும் சீரும் இலர் எனினும் - அரண் அழித்தற்கு அருமையும் பெருமையுமாகிய ஆற்றல் உடையர் அல்லராயினும், மாந்தர் உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - வினைக்கு உரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின்கண் சென்று தாக்குதல் அரிது. ('நிலத்தொடு' என்பது வேற்றுமை மயக்கம். ஆண்மை உடையாரைச் சிறுமைநோக்கி இருப்பின்கண்சென்று தாக்கின், அவர் அது விட்டுப்போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினராவர். ஆகவே, அவர்க்குப் பெரும்படை உடையும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அரசன் பதியும் பெருமையும் இலராயினும் மாந்தர் உறைநிலத்தின்கண் பொருந்துத லரிது. இது மாந்தர் உறைவிடத்தின்கண் செல்லுங்கால் அறிந்து செல்ல வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
சிறைநலனும் சீரும் இலர் எனினும் - அழித்தற் கரிய அரண்சிறப்பும் பெரும்படையும் பெரும்பொருளுமாகிய பிற பெருமையும் இல்லாதவராயினும் ; மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது - போர் வினைக்குச் சிறந்த மாந்தரை அவர் நிலையாக வதியும் இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிதாம் . ஒட்டல் பொருந்துதல் ; இங்குப் பொருந்திப் பொருதல் . ஆதலால் , பரிமேலழகர் குறித்தவாறு வேற்றுமை மயக்கம் அன்றாம் . அரிமாவும் வரிமாவும்போற் பொரும் ஆண்மை யுடையாரை தொகைச் சிறுமை நோக்கி யிகழ்ந்து அவரிருப்பிடஞ் சென்று தாக்கின் , அவர் மறமிகுதியானும் வேறிடமின்மையானும் உயிரைப் பொருட்படுத்தாது ஊன்றிப்பொருவர் . அதனாற் பெரும்படையும் அவர்க்கு உடையும் என்பதாம் . "ஊக்கம் ஒன்பது ஆளை அடிக்கும்" என்பது இங்குக் கவனிக்கத்தக்கது.
கலைஞர் உரை:
பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.
சாலமன் பாப்பையா உரை:
மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பாதுகாப்பான இட வசதி இல்லை என்பதற்காக இருக்கிற இடத்தையும் விட்டுவிடக்கூடாது.) பாதுகாப்பு வசதியும் மற்றச் சிறப்புக்களும் இல்லாவிட்டாலும் மக்கள் அவரவர்களுடைய உறைவிடத்தை விட்டுவிடாமல் இருப்பது அருமையான காரியம்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அரண் அழித்தற்கு அருமையினையும் பெருமை யினையும் ஆகிய ஆற்றவினையும் இல்லாதவராக இருந் தாலும் தொழிலுக்கு உரிய மாந்தரை அவர்கள் இருக்கின்ற இடத்திற்குச் சென்று தாக்குதல் அரிதான தாகும்.
தமிழ்க்குழவி உரை:
ஒருவர் தன் இடத்தில் நிலைத்திருக்கின்ற பொழுதுபெரும் அரணும், படைமுதலாகிய பாதுகாப்பும் இல்லை எனினும் பிறர் அவரை வெற்றி கொள்வது அரிது.
Translation
Though fort be none, and store of wealth they lack, 'Tis hard a people's homesteads to attack!.
Explanation
It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.
Transliteration
Sirainalanum Seerum Ilareninum Maandhar Urainilaththotu Ottal Aridhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 499